Friday, December 25, 2015

கல்வியாளர் அப்துல்கலாம்


தமிழன் தொலைக்காட்சி பட்டிமன்றத்தில்..



தின செய்தி நாளிதழில்...

டிச., 25., தின செய்தி நாளிதழில்...
என் சிறப்புக் கட்டுரை..
இணையத்தில் வாசிக்க.. dinacheithi.com


Tuesday, December 22, 2015

குமுதம் இதழில் மழையோடும் கவிதையோடும்....





மன அழுத்தத் தாழ்வு நிலையிலும்...... 
21.12.15 நாளிட்ட குமுதம் வார இதழில்
மழையோடும் கவிதையோடும் நான்.... 

நன்றி 
குமுதம் மற்றும் இதழாசிரியர்


Sunday, November 15, 2015

மழைக்குழந்தை



கம்மியும்
கை கால்களை உதைத்து கர்ச்சித்தும்
ஒலி எழுப்பும்
குழந்தையின்
அழுகையாய்க் கேட்கிறது
பலஹீனமாகவும்
பலமாகவும் பெய்யும்
மழையின் குரல்

அழவும் தெரியாமல்
அழாமல் இருக்கவும் முடியாமல்
விம்மி வெதும்பிக் கொண்டிருக்கும்
குழந்தையாய்
பரிதாபமாக முகத்தை
வைத்துக் கொண்டிருக்கிறது
மழை பொழியாத
நேரத்து மேகம்

அவ்வப்போது நிறுத்தி
நம் கவனத்தை ஈர்க்கும்
குழந்தையின் அழுகையென
நாம் கவனிக்கவே
விட்டு விட்டு
பெய்கிறது
மழையும்

அடிக்க வேண்டும் போல
கோபம் வந்தாலும்
ரசிக்காமல்
இருக்க முடிவதில்லை
குழந்தைகளின்
அடத்தைப் போலவே
மழையின்
அடத்தையும்

ஆனால்
குழந்தைகள் ஒருபோதும்
கொல்வதில்லை
குழந்தைகளை
மழையைப் போல!

- ஆதிரா முல்லை

Friday, November 13, 2015

இருப்புப் பாதை



பிழை பொறு

மன்னி

இந்த இணையில்

நீளும் பழுதற்ற

இருப்புப் பாதை

நட்பைத்

தொலை தூரம்

ஓட்டிச் செல்லும்


Wednesday, November 11, 2015

ரெளத்திரம் பழகு...... பாரதி கிருஷ்ணகுமார்


ஒரு வாரமாக எழுத நினைத்து கொரியக் கருத்தரங்கம், வைகை அனிசு மரணம், மழை...... காய்ச்சல்... மகிழ்ச்சி... உளைச்சல் என்று ஏதேதோ தொடர்ந்ததால் இன்றுதான் எழுத முடிந்தது. எதைப் பற்றி என்று கேட்கிறீர்களா? விகடன் நேர்காணல் பற்றி. என்ன... என் நேர்காணலா....... அடப் போங்க......
எழுத்தாலும் பேச்சாலும் தமிழ் மக்களைக் கவர்ந்த ஒரு மாபெரும் ஆளுமையின் நேர்காணல். ஆமாம்.....
ஒரு நூல் வெளியீட்டு விழாவில் முன் தயாரிப்பு ஏதுமில்லாது பத்து நிமிட நேரமே பேசிய, அந்த ரசமான (மிளகு ரசம் போல சுரீரென்று) பேச்சைக் கேட்டு அரங்கத்தின் முன் சென்று ஒருவரிடம் அறிமுகப் படுத்திக் கொண்டது எனக்கு முதல் அனுபவம்.
அந்த ஓரிரு வார்த்தைகளோடு முகவரி அட்டையைப் பரிமாறிக்கொண்டு விடைபெற்ற போது நினைக்கவில்லை அவரது ‘அப்பத்தா’, ‘அருந்தவப் பன்றி - மகாகவி பாரதி’ என்னும் இரு நூல்கள் என் இல்லம் தேடி வரும் என்று. இரண்டு இரவுகளில் இரண்டு நூல்களையும் படித்து முடித்த போது என்னுள் எஞ்சியது பெரும் வியப்பு.
குறிப்பாக.... அருந்தவப் பன்றியா பாரதியா....... என்ற வினாவோடு நூலை விரித்த போது விரிந்து கொண்டே போனது வியப்பு. பாரதி.. பாரதி என்று கூறும் ஒருவரும் கூறாத புதிய செய்திகள் அடங்கியது அந்த ஆய்வு நூல். ஆனால் அது எந்தப் பட்டத்திற்காகவும் ஆய்வு செய்யாத நூல். அந்த எழுத்துகளைப் பதித்த விரல்களுக்கு என்ன பரிசு தருவது......... !? விமர்சனத்தைத் தவிர.......அது பற்றிய விமர்சனம் அடுத்த பதிவில்.....
இப்போது.. விகடன் நேர்காணல் பற்றி.......
நம்பிக்கையோடு பேசுவதற்கு ஒரு வாயும் நம்பிக்கையோடு கேட்பதற்கு ஒரு ஜோடிக் காதுகளும் இருக்கும் வரை உரையாடலுக்கான தேவையும் உரையாடலும் இருந்து கொண்டே இருக்கும்....... என்று சொல்லும் நம்பிக்கை....
எதிர்ப்பின் குரலுக்குத்தான் சுதந்திரம் தேவை. ஆமோதிப்பின் குரலுக்கு எதற்குச் சுதந்திரம் என்று கேட்கும் தார்மீகம்......
அப்பாக்கள் கட்டிலில் படுத்திருப்பதும், அம்மாக்கள் தரையில் படுத்திருப்பதும் இந்தியக் குடும்பங்களில் சமத்துவத்துக்கான குறியீடு.... என்ற பண்டைய மரபின் மீதான எள்ளல்.......
சாக்ரடீசின் இறுதிக் கணங்களை பிளேட்டோ ஆவணப்படுத்தியிருக்கிறார். இறந்து போகும் போது டால்ஸ்டாய் பயன்படுத்திய கைக்குட்டையைப் பத்திரப் படுத்தியிருக்கிறார்கள்.ஆனால் உலகப் பொதுமறை’ எனச் சொல்கிற திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் யார் என நமக்குத் தெரியவில்லை...... என்று குமுறும் அறச்சீற்றம்...........
இந்தியாவில் இருந்த போது ஆஷ் தம் மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்களைப் பத்திரப் படுத்தியுள்ளது அவரது குடும்பம். ஆனால் வாஞ்சியின் மனைவி பொன்னம்மாள் என்ன ஆனாள்? என்று கேட்கும் வாஞ்சை........
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரைத் தேடிக் கொல்ல, இலண்டன் சாராயக் கடைகளிலும் பன்றித் தொழுவத்திலும் வேலை செய்து ஒரு துப்பாக்கி வாங்கி 16 வருடங்கள் காத்திருந்து படுகொலை செய்கிறானே உத்தம்சிங்........ இதுதான் ரெளத்திரம் பழகுவது... என்று பாரதியின் வாக்குக்கு ஆதாரம் கொடுக்கும் தெளிவு........
சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளுக்குப் பிறகும் தன் மக்களுக்குக் கல்வி கொடுக்காத அரசு........ ஒவ்வொரு நாளும் சிறுபான்மை மக்களை அச்சத்தின் விளீம்பில் வாழ நிர்ப்பந்திக்கிற அரசு, இன்னமும் பெண்களுக்குப் பாதுகாப்பான சமுக வாழ்க்கையை உத்தரவாதப் படுத்த வக்கற்ற இந்த அரசிடமிருந்து விருது பெற்றுக் கொள்வது அவமானம் இல்லையா என்று கேட்கும் துணிவு........
இந்தக் கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்........ என்று பழகிய ரெளத்திரம்......
இத்தனைக்கும் ஒட்டு மொத்தமான ஒரு பெயர்தான் பாரதி கிருஷ்ணகுமார் என்னும் ஆளுமை.

Friday, November 6, 2015

கொரிய - தமிழ் உறவுகள் பற்றிய கருத்தங்கில்..


கொரியத் தூதரகமும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய கொரிய தமிழ் உறவுகள் குறித்தான கருத்தரங்கு இன்று (06/05/15) அடையார் ரெசிடன்சி உணவகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் “கொரியாவில் தமிழரின் நெசவுக்கலையும் பண்பாடும் மொழிக்கூறுகளும்” என்னும் தலைப்பில் கட்டுரை வாசித்தேன். முதல் முறையாகப் பவர்பாயிண்ட் பயன்படுத்தியும் ஆங்கிலத்திலும். பாவம் வந்திருந்தவர்கள்......

















நேற்று (05/11/15) கொரியத் துணைத் தூதர் ஆய்வாளர்களுக்குக் கொடுத்த இரவு விருந்தின் போது





இது விருந்துக்கு முந்தைய கலந்துரையாடலின் போது





Tuesday, October 27, 2015

வ.வே.சு அவர்களுக்குப் ‘படைப்புலகச் சிற்பி’ விருது



இன்று மயிலை, பாரதிய வித்யாபவனில் உறவுச் சுரங்கம், பாரதிய வித்யாபவன், கிருஷ்ணா இனிப்பகம் மூன்றும் இணைந்து நடத்திய ‘சிகரத்தைத் தொட்ட சிவசங்கரி’ நிகழ்வில் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா. முனைவர். வ.வே.சு அவர்களுக்குப் ‘படைப்புலகச் சிற்பி’ விருது வழங்கப் பட்டது. (மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா)
இந்நிகழ்வில் மருத்துவ மாமணி திரு. சொக்கலிங்கம் அவர்கள் ‘காக்க காக்க இதயம் காக்க’ என்னும் தலைப்பில் சிற்றுரை ஆற்றினார். சிற்றுரையா அது? ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைத்தாற் போல பெரிய பயன் தரும் சிறிய உரை.
வாழும் பாரதி இல. கணேசன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். இந்திய நிலவறையில் காசுமீரம் பாகிஸ்தான் இரண்டும் எப்படி இடம்பிடித்துள்ளது என்ற நாற்பதுகளின் வரலாற்றை, ஏசுபிரான் சிலுவையில் மறிக்கவில்லை காசுமீரத்திற்கு வந்து காயத்திற்குப் பச்சிலைகளை எல்லாம் பயன்படுத்தி மருத்துவம் செய்து பிழைக்க வைத்து விட்டனர் என்று தாம் படித்த செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்ற வந்த வ.வே.சு. அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் சிறப்புரையும் சிரிப்புரையுமாகத் தந்து அரங்கத்தைத் தம் கட்டுப்பாட்டில் இருந்து இம்மியும் அசையாமல் இருக்கச் செய்தார். பேரா. வ.வே.சு. அவர்களின் உரையை ஒலிப்பதிவு செய்தேன். எப்போதும் முதல் வரிசையில் அமரும் வழக்கம் இல்லாததால் ஒளிப்பதிவு செய்ய இயலவில்லை. அந்த வருத்தத்துடன்,,,,,,,,,,
சில நிகழ்வுகளில் ஒருவரது உரை நன்றாக இருக்கும். அல்லது இருவரது உரை நன்றாக இருக்கும். ஆனால் இன்றைய நிகழ்வில் எல்லோருடைய உரையும் சிறப்புரைதான் தொகுத்து வழங்கிய பேரா.முனை. உலகநாயகி பழநி அவர்களின் உரை உட்பட........ இது ஒரு வரலாற்று மாலை

Saturday, October 24, 2015

பேக்கரும்பு பெற்றபேறு





                         ஏவுகணை எழுந்ததுஇரா மேசுவ ரத்தில் 
                                   எக்காள மிட்டவரின் இடுப்பொ டிக்க 
                        சாவுகணை வந்ததென்று எதிரி எல்லாம்
                                   சரணடைந்தார் ஆயுதத்தை மூடி வைத்தார் 
                         நோவுகளே தீண்டியவர் இளமை எல்லாம்
                                    நோகாமல் நோற்பதல்ல வெற்றி என்னும்
                          பாவுகளை நீர்நூற்றீர்; படகு ஓட்டும்
                                     பரதவரே! பாரதத்தின் தலைவ ரானீர்!


                           சுக்கலாகச் சிதறவிட்டீர்; பொக்ரான் சக்தி
                                     சோதனையில் வல்லரசு நாட்டை யெல்லாம்
                            கக்கனைத்தான் எளிமை என்பார்; அப்துல்
                                     கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர்
                            நிக்காவே செய்யாமல் பிள்ளை பெற்று
                                       நேசமுடன் வளர்த்திட்ட கணியன் நீரே
                            விக்கலெல்லாம் உம்நினைவைச் சுமந்தே விக்கும்
                                        வீறுகொண்ட இளைஞர்க்கவை விசையாய் நிற்கும்

                             நாளிதழை நீர்சுமந்தீர் நாங்கள் நெஞ்சில்
                                         நாள்தோறும் சுமக்கின்றோம் உம்நி னைவை
                             பாழிதழா உம்இதழ்கள்? தமிழ்ப்பா தம்மை
                                        பாரெல்லாம் பாடிவந்த நெய்தல் பண்ணின்
                             யாழிதலே உம்மிதழ்கள்; புறநா னூறு,
                                         அறநூலாய் நீர்வாழ்ந்தீர்; கொல்லும் நச்சு
                             வேலிதழை ஏந்துகின்ற கால னுக்கு
                                          விருந்தானீர் கதறுகின்றோம் காலா சா!சா!

                            விழலுக்கு நீர்இறைத்தார் பலரும்; நீரோ
                                        விழுதுகளின் விளைச்சலுக்கே நிதம்உ ழைத்தீர்
                            கழலையல்ல உம்சுரப்பு கருணை மாரி
                                        கணைமாரி அணுமாரி பெய்த போதும்.
                            மழலையெல்லாம் மாலையா கிஉம்மைச் சூடும்
                                        மனமாண்பு விதையிட்ட உழவா; எங்கள்
                            சலவையே செய்யாத அழுக்கை எல்லாம்
                                       சஞ்சலமே இல்லாமல் வெளுத்து விட்டீர்

                            நாகரும்பு மனிதர்நீர்: நவின்ற தெல்லாம்
                                        நற்றமிழன் வாழ்முறைக்கு வாக்கு கள்தாம்
                            கைகரும்பு எழுத்தாகப் பதித்த தெல்லாம்
                                        காலத்தை வெற்றிகொள்ளும் புதிய கீதை
                             தேக்(கு)கரும்பு தேகம்கொண்ட தியாகி! தேவ
                                        குழந்தைகளும் காண்பதற்கோ வானம் சென்றீர்?
                             பேக்கரும்பு மணிவயிறு பெற்றபேறு மீண்டும்
                                         பெருமைமிகு கருவானீர் புனித மண்ணில்

- ஆதிரா முல்லை
பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் மறைந்த போது எழுதிய அஞ்சலி கவிதை. வேறு இதழ்களில் வந்து விட்டது என்று கூறிய பின்னும் 4 இதழ்களில் இடம் பிடித்தது இந்தக் கவிதை.
நன்றி...
கவிதை உறவு,
புதுகைத் தென்றல்
உரத்த சிந்தனை
முரசு சங்கமம்

கவிதைகளால்தான் முடியும்



உறக்கத் தேவதையால்
ஆசிர்வதிக்கப் படாதது
பலரின் இரவுகள்
அவளின் சாபங்களோடு
வாழ்வது அவ்வளவு எளிதல்ல
எப்படியேனும் கடந்தாக வேண்டும்
ஆசிர்வாதம் பெறாத அந்த இரவுகளை
கவிதைகளால்தான் அது முடியும்
விழித்தெழுக எழுத்துகளே
கவிதைகளுக்கென
ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள் நீங்கள்

Thursday, October 15, 2015

உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது


















குலோபல் எகனாமிக் ஃப்ராகரஸ் ரிசர்ச் அசோசியேஷன், புது தில்லி (CLOBAL ECONOMIC PROGRESS & RESEARCH ASSOCIATION, NEW DELHI) பல்வேறு துறைய்யில் சாதனை புரிந்தவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் கோல்டு மெடல் விருதினை (DR. ABDUL KALAM GOLD MEDAL AWARD)  வழங்கியது.

அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது மகிழ்வு. உச்சநீதி மன்ற நீதியரசர் ச. மோகன், அண்ணா பல்கலையின் முன்னைத் துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவஹர் மற்றும் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் நித்யா குமார், ஜிப்ராவின் பொதுச்செயலாளர் டாக்டர் சாகித் பாஷா ஆகியோருடன்......

அடியேனும் தனி சாதனையாளருக்கான தங்கப் பதக்க விருதினைப் பெற்றேன் என்பது கூடுதல் மகிழ்வு.


Monday, October 12, 2015

சாகசக் கலை



சாகசக் கலை
***************

புலன்களைப் பூட்டி விடுவதும்
புத்துயிர்த்து மலர்த்துவதுமான
சாகசக் கலையைக்
கற்றுள்ளது
உன் விரல்கள் உதிர்க்கும்
வார்த்தைகள்


Tuesday, September 15, 2015

தமிழச்சிக்கு வாழ்த்துகள்

11.09.15 அன்று  நம்ம செல்லத்தமிழச்சி பாரதி பணிச்செல்வர் விருது பெற்றார்கள்.. அழகா குட்டியா ஒரு ஏற்புரை சொன்னாங்க. அவர்களை வாழ்த்தி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட போது.......
சென்ற ஆண்டு இவ்விருதினைப் பெறும் பேற்றினை நானும் பெற்றது மகிழ்வாக



Saturday, September 5, 2015

ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

ஆசிரியர் தினமான (05.-09.15) இன்று தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்திடமிருந்துஆசிரியர் செம்மல் விருதுபெற்ற நெகிழ்வான தருணம். 
*************************************************************************************************
*
இனிக்க இனிக்கத் தமிழில் பேசும் இளைய சமுதாயத்திற்காகத் தொண்டாற்றும் மாண்பமை நீதியரசர் ஆர். மகாதேவன் அவர்களிடமிருந்து விருது பெற்றது இனிது.
* யாருடைய பிறந்தநாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் பெறுகிறதோ அவரது இல்லத்தில் இவ்விருதினைப் பெற்றது இனீதினும் இனிது.
* விருது பெற்றவர்களின் சார்பில் ஏற்புரையாற்றியது மேலும் நெகிழ்வு.
* முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களது இல்லம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து அவர் வசித்த இடத்தின் காற்றையெல்லாம் சுவாசித்துத் தீராமல்..... தீரும்பியது பெரிதினும் பெரிது.
.* டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்களது பெயர்த்தி (தள்ளாத வயதிலும்) இனிதாக வரவேற்று எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டது மகிழ்வினும் மகிழ்வு.
* இத்தனைக்கும் அன்புச் சகோதரர் நல்லாசிரியர் முனைவர். கோ. பெரியண்ணன் அவர்களுக்கு நன்றி.
*************************************************************************************************
எல்லாவற்றுக்கும் மேலாக எத்தனை புகைப்படங்கள்!!!! கவிஞர் நம்ம ஊர் கோபி... உங்களுக்கு நன்றியெல்லாம் கிடையாது. அன்பு....... அன்பு... அன்பு.... அன்பு மட்டும்தான்.
*************************************************************************************************