Showing posts with label இரங்கற்பா. Show all posts
Showing posts with label இரங்கற்பா. Show all posts

Saturday, June 15, 2013

இயக்குநர் மணிவண்ணன் கருப்புச் சட்டைக்குள் ஆர்ப்பரித்த வெள்ளை உள்ளம் அமைதி அடையட்டும்.






இயக்குநர் மணிவண்ணன் இயற்கை எய்தியதினார் என்னும் செய்தி இதயத்துள் கனக்கிறது. ஒரு சில மணி நேரங்கள் அவருடன் பேசி, சிரித்து மகிழ்ந்ததை மனம் அசை போடுகிறது. அவர் என்னிடம் வைத்த வேண்டுகோளை நிறைவேற்ற முடியவில்லை. வருந்துகிறேன். குழந்தை மனத்துடன் பேசியதை, அவரது கைப்பேசியில் புகைப்படம் எடுத்த்க்கொண்டதை, “நான் படிக்காதவன்ம்மா, எனக்கு இலக்கியத்தில் இருக்கும் வைதீக முறைத் திருமணங்கள் எப்படி நடந்தன? முக்கியமாகக் கண்ணகி, சீதை, பாஞ்சாலி போன்றோரின் திருமணம் குறித்த செய்திகளை எழுதித் தாருங்கள். நான் நடத்தி வைக்கும் சுயமரியாதைத் திருமணங்களில் அதைப் பற்றி பேச வேண்டும்” என்று கேட்டுக்கொண்டதை எப்படி மறக்க? இரு திங்களுக்கு முன்னர் அழைத்து அடுத்த மாதம் தருகிறேன் என்று கூறினேன். மிகவும் வருந்துகிறேன். அந்தக் கருப்புச் சட்டைக்குள் ஆர்ப்பரித்த வெள்ளை உள்ளம் அமைதி அடையட்டும். அவருக்கு என் வீர வணக்கம்


இயக்குனர் மணிவண்ணைப் பற்றி..அந்த விழாவில் வாசித்த கவிதை.. இன்று கண்களின் நீர்த்தாரைகளுடன்....

கருஞ்சிறுத்தைக் கூட்டம் 
இவன் 
கன்னத் தாடி
கண்ணிரண்டும்???? 
கன்னி வெடி
என்ன முரண்? 
மணிவண்ணன் கருத்த மெய்யில் 
கலங்கமில்லா 
வெள்ளை உள்ளம்
வெள்ளித்திரை சிரிப்புக்கு..... 
பல்லே இவன் தான்!
நாவில்
சொல்லணையைக் க்ட்டி வைத்து 
நல்ல தமிழ் சிந்தனையை 
இயக்குகின்றான்.


Wednesday, March 27, 2013

மரணப்பால் ஆகட்டும்



மனிதத்தை மாய்த்தவனைக் 

மாய்க்கக் கொடுக்கும் 
மறத்தமிழச்சியின் 
மடிப்பால் இது. 

இவன் அமுத வாயூறும் 

கடைசி தாய்ப்பாலே
அந்தக் கயவனது 
மரணப்பால் ஆகட்டும்


Wednesday, March 13, 2013

பொசுக்கிடும் உறுதி யாக!




சாய்ந்ததோ தளிரின் வாழை
            சரிந்ததோ இளைய ஈழம்
ஓய்ந்ததோ உயிரின் ஓசை
            ஒடிந்ததோ ஆலின் விழுது
ஆய்ந்ததோ தந்தை வீரம்
            அகத்தினில் உளதோ என்று
பாய்ந்ததோ குண்டு மாரி
            பாலச் சந்திரன் மார்பில்

பூயிலை துளிர்க்கும் போதே
            பூகம்பம் கண்ட தம்மா
வாயினில் ரொட்டி தந்து
            வன்கொலை கொண்ட தம்மா
சேயினைச் சுட்டுக் கொன்ற
            செறுப்பினன் சிங்க ளத்து
நாயிடம் நட்பு கொண்ட
            நரியினம் நசிந்து போக!

மாண்டிடப் பிறந்தா யாநீ
            மன்னவன் தமிழீ ளத்தை
ஆண்டிடப் பிறந்தா யப்பா!
            ஆண்மகன் இல்லான், வீரம்
மாண்டிட்ட பேடி யைப்போல்
            மாய்த்தனன் மலரும் மொட்டை
தோண்டிய குழியில் இட்டு
            தொலைத்தனன் ஈழ வேரை

நீதியும் இல்லான் போரின்
            நியதியும் அறியான் பொல்லாச்
சாதியின் தலைவன் நீசன்
            சிங்கள ராஜ பட்சே
நாதியில் நாயாய், நட்ட
            நடுநிசிப் பேயாய், வெய்யோன்
வீதியில் நெளியும் புழுவாய்
            விதித்திட சாப மிட்டேன்

சொற்குற்றம் இழைத்த போது
            சொல்லினால் ஊரைச் சுட்ட
கற்பினள் வாழ்ந்த மண்ணின்
            கண்ணின்நீர் விடுக்கும் சாபம்
ர்குற்ற மற்ற பாலன்
            ஒருவனைச் சுட்ட உன்னை
போர்க்குற்ற வாளி ஆக்கி
            பொசுக்கிடும் உறுதி யாக!


(இந்தக் கவிதை 17/03/13 நாளிட்ட மாலை முரசு நாளிதழில் வெளியானது. நன்றி மாலை முரசு.)
  




Friday, January 25, 2013

மு.இளங்கண்ணனார் - இரங்கற்பா


திருக்குறளாய் வாழ்ந்திட்டார் வீதி யெங்கும்
            திறமான அறிவியலைத் தெளித்து விட்டார்
செறுக்கில்லா தன்னடக்கம் கொண்ட தாலே
            செம்மாந்து நிற்கின்றார் சிகர மாக
மறக்கின்ற பணியாசெய்தா? மக்க ளெல்லாம்
            மதிக்கின்ற கீதைக்குக் காதை செய்தார்
விரிக்கின்ற சூரியனாய் இலக்கி யத்தை
            விலாசமிட்டு வையமெங்கும் பரப்பி விட்டார்

தெள்ளுதமிழ் படித்துவந்தார் தேடித் தேடித்
            தேன்மலராய்க் கவிமலர்கள் பூத்து வந்தார்
சொல்லையிலே புரியாத புள்ளி யியலுக்
            ககராதி புதுத்தமிழில் ஆக்கித் தந்தார்
துள்ளலிடும் அருவிகளின் ஓட்டம் போல
            தூயகுறள் குழந்தைகளின் நெஞ்சில் வார்த்தார்
அல்லிமலர் சிரிப்பெடுத்து இதழில் வைத்தார்
            அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும்

பனைவெல்லத் தமிழுக்குப் பாகாய் மேலும்
            பாங்கான அறிவியலை இனிக்கத் தந்தார்
நனைந்தால்தான் உடல்நடுங்கும் ஐயா நாங்கள்
            நனையாமல் நடுங்குகின்றோம் கையற் றேங்கி
சுனைவற்றிப் போனபின்பு துடிக்கும் மீனாய்
            சுருண்டபடி கிடக்கின்றோம் நெஞ்சம் இற்று
மனைமக்கள் தவிக்கின்றோம் ஐயா நீங்கள்
            மறுபடியும் வருவீரோ தமிழுக் காக!



(இக்கவிதை 19.01.13 அன்று பன்ருட்டி ச. இராமச்சந்திரன். மாவீரர். பழ. நெடுமாறன் 
தலைமையில் நடந்த அறிவியல் தமிழறிஞர்.திருக்குறள் செல்வர். முனைவர். 
மு. இளங்கண்ணனார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பாடிய இரங்கற்பா)


Sunday, June 20, 2010

முகவரி தந்த தந்தைக்குச் சில வரிகள்....



ஞானத்தால் நலிந்த தேகம்
நயவுரை பெய்யும் மேகம்
வானத்தின் கதிரின் வீச்சு
வளைந்திடா அருவிப் பேச்சு
ஊனத்தைக் காணா சொற்கள்
உண்மையின் வைரக் க்ற்கள்
தேனொத்த நட்பு! அய்யோ
தேர்அச்சு முறிந்த தய்யோ!

துணைவிக்குப் பத்ம நாபன்
குழந்தைக்கு ஆத்ம நாதன்
வாதித்து வெற்றி கொள்ளும்
வசந்தத்தின் ஆணி வேர்கள்
சோதிக்கும் சோதி ஆகி
சுடர்மிகும் பகுத்த அறிவு
ஊதியப் புகையாய் போச்சே
உடம்பது நீராய் ஆச்சே!

சிந்தனை நீயே அப்பா!
செயலிலும் நீயே அப்பா!
எந்தனை இறுதி வரையில்
காத்திடும் இறைவன் ஆனாய்
சொந்தமும் பலவாய்த் தந்தாய்
சுடர்விடும் பாசம் தந்தாய்
எந்தையே எங்கு நோக்கின்
இருப்பவன் நீயே அப்பா!




இது என் தந்தையின் மறைவின்போது எழுதிய இரங்கற்பா. (17.01.2010) காற்றில், ஒலியில், ஒளியில், அனலில், புணலில் கரைந்து எம்மைக் காக்கும் என் அன்புத்தந்தையை இந்நாளில் வணங்குகிறேன்.