Wednesday, April 20, 2016

காதல் என்ன குறுக்கெழுத்துப் போட்டியா


காதல் என்ன 
குறுக்கெழுத்துப் போட்டியா
விடுபட்ட கட்டங்களை
நான்கு ஐந்து ஆறு 
என்று
எழுத்துகளைக் கொண்டு நிரப்பி விட
இடமிருந்து வலம்
வலமிருந்து இடம்
கீழிருந்து மேல்
மேலிருந்து கீழ்
மட்டுமல்ல
கட்டங்களை விட்டு விட்டு
நிரப்பினாலும்
அதில்
உன் பெயரை மட்டும்தான்
எழுத முடியும்
அந்தப் பெயருக்குப்
பொருத்தமில்லாத கட்டங்கள்
காலியாகவே
இருந்து விட்டுப் போகட்டுமே!

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?



கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
*****************************************************************************
தமிழ்த் துறையில் என்னுடன் டாக்டர் சாரதா என்பவர் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அவர் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆனாலும் பல வருடங்கள் பழகியது போல ஒரு நெருக்கம். அத்தனை அன்பானவர். அவர் சில நாட்களாக விடுப்பில் உள்ளார்.

அவர் என்னை அழைத்துப் பேசினார். நலமாக இருக்கிறீர்களா என்று வழக்கமாகப் பேச்சைத் தொடங்கினார். நானும் நலம்தான் என்று கூறினேன். அவர் மீண்டும் மீண்டும் நலமாக உள்ளீர்கள் தானே என்று கேட்டார். நானும் ஆமாம். ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அவர், இரண்டு நாட்களாகக் கனவில் வந்து என்னைத் துன்பப் படுத்துகிறீர்கள் என்றார். எப்படி? என்றேன்.
“நீங்க ஆஸ்பிடல்ல இருக்கீங்க. நானும் என் மகளும் உங்களப் பார்க்க வர்ரோம். நீங்க குழந்தையக் கூட்டிட்டு ஏன் வந்தீங்க?குழந்தையக் கூட்டிக் கொண்டு ஏன் வந்தீங்க? கிளம்புங்கன்னு திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கீங்க. முதல் நாள் என்னமோ உங்கள் நினைவு என்று விட்டு விட்டேன். நேற்றும் திரும்ப அதே கனவு. எனக்கு மனசே சரியில்ல. என்னவோ பயமா இருந்தது” என்றார்.
கனவுகளுக்கும் பிரியங்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் அறிவோம். ஆனால் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்குமான்னு யாராவது சொல்லுங்க.
ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன். கல்லூரியும் செல்லவில்லை. 13 ஆம் தேதி மக்கள் கவிஞர் விருது வழங்கும் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று. அதற்கும் செல்லவும் சொல்லவும் முடியாத நிலையை ஒருவாறாக வீட்டில் இருந்தபடியே சமாளித்தேன் என்பது வேறு. இன்னும் தோள் பட்டை, கை வலியோடும் மருந்துகளோடும் ஓய்வோடும் வீட்டில் இருக்கிறேன்.
அந்தத் தோழி இப்போது ராஜ பாளையத்தில் இருக்கிறார். வியந்தும் பயந்தும் வந்தவுடன் என்னப் பார்க்க வேண்டும் என்று கூறியும் பேச்சை முடித்தார்.
இப்போது என் மற்றும் அவரது வியப்பெல்லாம் கனவு பற்றியது.... (நமக்கு அந்த மூட நம்பிக்கையெல்லாம் இல்லை என்றாலும்) நான் மருத்துவ மனை சென்றதற்கும் அவரது கனவுக்கும் தொடர்பு உண்டா? தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

Thursday, April 7, 2016

மீரா விருது வழங்கும் விழாவில்....

பல நிகழ்வுகளில் கலந்து கொள்கிறோம். ஒரு சில நம் மனத்தை விட்டு நீங்கா நினைவாகி மகிழ்வைத் தருகின்றன. மதுரையில் 03.04.16 ஞாயிறு அன்று வளரி இதழும் சூல் வாசிப்புத் தளமும் இணைந்து நடத்திய கவிப்பேராசான் மீரா விருது வழங்கும் நிகழ்வின் அதிர்வு இன்னும் மனத்தை விட்டு நீங்காமல் பசுமையாக உள்ளது. விழாவைச் சிறப்பாக நடத்திய திரு அருணா சுந்தரராசனின் அன்பும் பழகும் நேர்த்தியும் மனத்தில் அவருக்கு ஒரு அழுத்தமான இடத்தைத் தர வைத்து விட்டது.

நிகழ்வில் கவிஞர் மீராவைப் பற்றி நினைவுப் பேருரையாற்றிய பேரா. தி.சு.நடராசன் அவர்கள் விழியோரம் நீரை வர வைத்தார். தலைமையுரையாற்றிய திரு செல்லா அவர்கள் சுருக்கமான உரையாற்றினார். முத்துநிலவன் ஐயா உடபட வாழ்த்துரை வழங்கிய பலரும் உருக்கமாக உரையாற்றினர்.

விழா தொடங்கும் முன்பும் தொடங்கிய பின்பும் ஒவ்வொருவரும் தனித்தனியாக அறிமுகம் செய்து கொண்டு அளவாளாவியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..

விருதாளர் மு. கீதா, தமிழ்வாசி ( வைரஸ் தாக்குதலில் இருந்து என் முகநூலைக் காக்க வலையில் உதவிய அன்புத் தம்பி), வைகறை, போடி சிவாஜி, அர்ஷியா, சோலைச்சி, இரா. ஜெயா, ராம்போ குமார், ரபீக் ராஜா மற்றும் பல நட்புகளைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக.... (பலரது பெயர்கள் நினைவில் இல்லை. நட்புகள் மன்னிக்கவும்)

அருமையானதொரு நிகழ்வை அமைத்துக் கொடுத்த (விருது வழங்கி சிறப்புரை) அருணா அவர்களுக்கு உள்ளங்கை கொள்ளாத நன்றி மலர்கள்.

எதோ நான்கு புகைப்படங்கள் அனுப்புவார் என்று என் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் புகைப்படக் கருவியில் பதிவான அத்தனை ஒளிப்படங்களையும் அனுப்பி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய சாப்லின் ஸ்டுடியோ கோபாலகிருஷ்ணன் ஆழமான நேசிப்புக்குரியவர்.



























Monday, March 21, 2016

எல்லாம் அவன் மயம்



                     அவனோடு மட்டுமே
                     அசைபோடுவது
                     என்றாகும் வாழ்வில்
                     தன் சுயமிழந்து
                    அவளுக்கானது
                    என்று எதுவுமே
                    இல்லாது போகிறது


                    எல்லாம் அவன் மயம்

Wednesday, February 17, 2016

வாகை சூட....



நம் மீது எத்தனைக் கற்கள்
எறியப் படுகின்றன
சிலவற்றில்
உறவுப்பெயர்கள் 
சிலவற்றில்
உறவற்றவர்களின் பெயர்கள்
சிவவற்றில்
நட்புப் பெயர்கள்
சில சினத்தோடு
சில சில்மிஷம் பூசப்பட்ட
சிரிப்போடு
சில வன்மத்தோடு
சில வன்முறைகளோடு
சில துரோகங்களோடு
சில புன்னகையோடு
ஒவ்வொரு கல்லிலிருந்தும்
ஒரு பூ நமக்காகப் பூக்கிறது
அவை
வாகையாக்கி நம்மைச் சூடுகின்றன!

Saturday, February 13, 2016

பன்னாட்டு அலையன்ஸ் சங்க விருது.. உங்கள் ஆதிராவுக்கு....

பன்னாட்டு அலையன்ஸ் சங்கம் எனக்கு தலைமைப் பண்பிற்கான விருதினை வழங்கியது. இந்த மதிப்புறு வில்லையை எனக்கு அளித்து அடுத்து அடுத்து பலமுறை தகுதியானவர் என்று என்னைப் பாராட்டிய பன்னாட்டு இயக்குநர் அலை.டி. ராம்சிங் அவர்களுக்கும் அலையன்ஸ் சங்கத்தில் எப்போதும் என்னை ஆற்றுப் படுத்திக்கொண்டிருக்கும் மாவட்ட சாசன ஆளுநர் அலை. இரா.மதிவாணன் அவர்களுக்கும் நன்றிகள்






ஒன்னுமே செய்யல்லன்னா விருது கொடுப்பாங்களோ...!!!













Tuesday, January 26, 2016

மர்மமென்ன?




வார்த்தை வலை வீசி
வன்முறைகள் பல கூட்டும் 
கலிங்கத்துப் பரணியின்
கடை திறப்புக் காதை
அல்ல
அவன்
மோன மொழி பேசி
ஊனை உருகவைக்கும்
ஓசை இல்லா
திருவாசகம்
காலை ஒருகூடல்
மாலை மறுகூடலென
காமக் கவி பாடும்
முக்கூடல் பள்ளு
அல்ல
அவன்
இன்ப வேள்வியிலும்
துன்பம் சூழ்கையிலும்
அத்வைதம் ஆகிவிடும்
திருக்கோவையார்
சிற்றின்பக்
கதை எல்லாம்
சிலாகித்துச் சொல்லும்
குறுந்தொகை அல்ல
அவன்
பேரின்ப உலகுக்கு
சேரும்
கதை சொல்லும்
பெரிய புராணம்
காதல் தேவாரம்
அவன்
காதில் படிக்கையிலே
சாதல் போலின்பம்
கொண்டதெந்தன்
ஆவியெலாம்
இன்ப இலக்கியமே
இமைவிளிம்பில்
அவன் படித்தான்
பரணிப் பறையாக
மாறியதன்
மர்மமென்ன?

Friday, January 15, 2016

பேரின்பத்தின் எல்லையில்.......


சங்கத்தமிழ் பதித்த சிங்கத்தமிழன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைச் சந்தித்து என் கவிதை, கட்டுரைத் தொகுப்பு நூல்களைக் கொடுத்து வாழ்த்து பெற்ற இனிய தருணம்....

என்னை அறிமுகம் செய்து கொள்ளும்போது டாக்டர். பானுமதி என்று கூறினேன். அவருக்காக எழுதிய 12 அடிகளால் ஆன அறுசீர் விருத்தத்தைப் பொறுமையாக முழுவதும் படித்தது வியப்பு....

படித்து முடித்தவுடன் பெயர் என்ன சொன்னீர்கள் என்று கேட்டபோதுதான் நினைவு வந்தது கவிதையின் கீழ் ஆதிரா முல்லை என்று கையொப்ப மிட்டிருந்தது. அது என் புனை பெயர் என்று கூறிய போது பெயர் புதுமையாக அழகாக உள்ளது என்று பாராட்டியது வியப்பு.

நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் என்று தமிழ்த்தாயின் தலைமகன் வாயால் வாழ்த்து பெற்றது சங்கப் புலவனும் தொல்காப்பியனும் வள்ளுவனும் வாழ்த்தியது போல.....

பேரின்பத்தின் எல்லையில்.......

Friday, December 25, 2015

கல்வியாளர் அப்துல்கலாம்


தமிழன் தொலைக்காட்சி பட்டிமன்றத்தில்..



தின செய்தி நாளிதழில்...

டிச., 25., தின செய்தி நாளிதழில்...
என் சிறப்புக் கட்டுரை..
இணையத்தில் வாசிக்க.. dinacheithi.com


Tuesday, December 22, 2015

குமுதம் இதழில் மழையோடும் கவிதையோடும்....





மன அழுத்தத் தாழ்வு நிலையிலும்...... 
21.12.15 நாளிட்ட குமுதம் வார இதழில்
மழையோடும் கவிதையோடும் நான்.... 

நன்றி 
குமுதம் மற்றும் இதழாசிரியர்


Sunday, November 15, 2015

மழைக்குழந்தை



கம்மியும்
கை கால்களை உதைத்து கர்ச்சித்தும்
ஒலி எழுப்பும்
குழந்தையின்
அழுகையாய்க் கேட்கிறது
பலஹீனமாகவும்
பலமாகவும் பெய்யும்
மழையின் குரல்

அழவும் தெரியாமல்
அழாமல் இருக்கவும் முடியாமல்
விம்மி வெதும்பிக் கொண்டிருக்கும்
குழந்தையாய்
பரிதாபமாக முகத்தை
வைத்துக் கொண்டிருக்கிறது
மழை பொழியாத
நேரத்து மேகம்

அவ்வப்போது நிறுத்தி
நம் கவனத்தை ஈர்க்கும்
குழந்தையின் அழுகையென
நாம் கவனிக்கவே
விட்டு விட்டு
பெய்கிறது
மழையும்

அடிக்க வேண்டும் போல
கோபம் வந்தாலும்
ரசிக்காமல்
இருக்க முடிவதில்லை
குழந்தைகளின்
அடத்தைப் போலவே
மழையின்
அடத்தையும்

ஆனால்
குழந்தைகள் ஒருபோதும்
கொல்வதில்லை
குழந்தைகளை
மழையைப் போல!

- ஆதிரா முல்லை

Friday, November 13, 2015

இருப்புப் பாதை



பிழை பொறு

மன்னி

இந்த இணையில்

நீளும் பழுதற்ற

இருப்புப் பாதை

நட்பைத்

தொலை தூரம்

ஓட்டிச் செல்லும்


Wednesday, November 11, 2015

ரெளத்திரம் பழகு...... பாரதி கிருஷ்ணகுமார்


ஒரு வாரமாக எழுத நினைத்து கொரியக் கருத்தரங்கம், வைகை அனிசு மரணம், மழை...... காய்ச்சல்... மகிழ்ச்சி... உளைச்சல் என்று ஏதேதோ தொடர்ந்ததால் இன்றுதான் எழுத முடிந்தது. எதைப் பற்றி என்று கேட்கிறீர்களா? விகடன் நேர்காணல் பற்றி. என்ன... என் நேர்காணலா....... அடப் போங்க......
எழுத்தாலும் பேச்சாலும் தமிழ் மக்களைக் கவர்ந்த ஒரு மாபெரும் ஆளுமையின் நேர்காணல். ஆமாம்.....
ஒரு நூல் வெளியீட்டு விழாவில் முன் தயாரிப்பு ஏதுமில்லாது பத்து நிமிட நேரமே பேசிய, அந்த ரசமான (மிளகு ரசம் போல சுரீரென்று) பேச்சைக் கேட்டு அரங்கத்தின் முன் சென்று ஒருவரிடம் அறிமுகப் படுத்திக் கொண்டது எனக்கு முதல் அனுபவம்.
அந்த ஓரிரு வார்த்தைகளோடு முகவரி அட்டையைப் பரிமாறிக்கொண்டு விடைபெற்ற போது நினைக்கவில்லை அவரது ‘அப்பத்தா’, ‘அருந்தவப் பன்றி - மகாகவி பாரதி’ என்னும் இரு நூல்கள் என் இல்லம் தேடி வரும் என்று. இரண்டு இரவுகளில் இரண்டு நூல்களையும் படித்து முடித்த போது என்னுள் எஞ்சியது பெரும் வியப்பு.
குறிப்பாக.... அருந்தவப் பன்றியா பாரதியா....... என்ற வினாவோடு நூலை விரித்த போது விரிந்து கொண்டே போனது வியப்பு. பாரதி.. பாரதி என்று கூறும் ஒருவரும் கூறாத புதிய செய்திகள் அடங்கியது அந்த ஆய்வு நூல். ஆனால் அது எந்தப் பட்டத்திற்காகவும் ஆய்வு செய்யாத நூல். அந்த எழுத்துகளைப் பதித்த விரல்களுக்கு என்ன பரிசு தருவது......... !? விமர்சனத்தைத் தவிர.......அது பற்றிய விமர்சனம் அடுத்த பதிவில்.....
இப்போது.. விகடன் நேர்காணல் பற்றி.......
நம்பிக்கையோடு பேசுவதற்கு ஒரு வாயும் நம்பிக்கையோடு கேட்பதற்கு ஒரு ஜோடிக் காதுகளும் இருக்கும் வரை உரையாடலுக்கான தேவையும் உரையாடலும் இருந்து கொண்டே இருக்கும்....... என்று சொல்லும் நம்பிக்கை....
எதிர்ப்பின் குரலுக்குத்தான் சுதந்திரம் தேவை. ஆமோதிப்பின் குரலுக்கு எதற்குச் சுதந்திரம் என்று கேட்கும் தார்மீகம்......
அப்பாக்கள் கட்டிலில் படுத்திருப்பதும், அம்மாக்கள் தரையில் படுத்திருப்பதும் இந்தியக் குடும்பங்களில் சமத்துவத்துக்கான குறியீடு.... என்ற பண்டைய மரபின் மீதான எள்ளல்.......
சாக்ரடீசின் இறுதிக் கணங்களை பிளேட்டோ ஆவணப்படுத்தியிருக்கிறார். இறந்து போகும் போது டால்ஸ்டாய் பயன்படுத்திய கைக்குட்டையைப் பத்திரப் படுத்தியிருக்கிறார்கள்.ஆனால் உலகப் பொதுமறை’ எனச் சொல்கிற திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் யார் என நமக்குத் தெரியவில்லை...... என்று குமுறும் அறச்சீற்றம்...........
இந்தியாவில் இருந்த போது ஆஷ் தம் மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்களைப் பத்திரப் படுத்தியுள்ளது அவரது குடும்பம். ஆனால் வாஞ்சியின் மனைவி பொன்னம்மாள் என்ன ஆனாள்? என்று கேட்கும் வாஞ்சை........
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரைத் தேடிக் கொல்ல, இலண்டன் சாராயக் கடைகளிலும் பன்றித் தொழுவத்திலும் வேலை செய்து ஒரு துப்பாக்கி வாங்கி 16 வருடங்கள் காத்திருந்து படுகொலை செய்கிறானே உத்தம்சிங்........ இதுதான் ரெளத்திரம் பழகுவது... என்று பாரதியின் வாக்குக்கு ஆதாரம் கொடுக்கும் தெளிவு........
சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளுக்குப் பிறகும் தன் மக்களுக்குக் கல்வி கொடுக்காத அரசு........ ஒவ்வொரு நாளும் சிறுபான்மை மக்களை அச்சத்தின் விளீம்பில் வாழ நிர்ப்பந்திக்கிற அரசு, இன்னமும் பெண்களுக்குப் பாதுகாப்பான சமுக வாழ்க்கையை உத்தரவாதப் படுத்த வக்கற்ற இந்த அரசிடமிருந்து விருது பெற்றுக் கொள்வது அவமானம் இல்லையா என்று கேட்கும் துணிவு........
இந்தக் கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்........ என்று பழகிய ரெளத்திரம்......
இத்தனைக்கும் ஒட்டு மொத்தமான ஒரு பெயர்தான் பாரதி கிருஷ்ணகுமார் என்னும் ஆளுமை.

Friday, November 6, 2015

கொரிய - தமிழ் உறவுகள் பற்றிய கருத்தங்கில்..


கொரியத் தூதரகமும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய கொரிய தமிழ் உறவுகள் குறித்தான கருத்தரங்கு இன்று (06/05/15) அடையார் ரெசிடன்சி உணவகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் “கொரியாவில் தமிழரின் நெசவுக்கலையும் பண்பாடும் மொழிக்கூறுகளும்” என்னும் தலைப்பில் கட்டுரை வாசித்தேன். முதல் முறையாகப் பவர்பாயிண்ட் பயன்படுத்தியும் ஆங்கிலத்திலும். பாவம் வந்திருந்தவர்கள்......

















நேற்று (05/11/15) கொரியத் துணைத் தூதர் ஆய்வாளர்களுக்குக் கொடுத்த இரவு விருந்தின் போது





இது விருந்துக்கு முந்தைய கலந்துரையாடலின் போது





Tuesday, October 27, 2015

வ.வே.சு அவர்களுக்குப் ‘படைப்புலகச் சிற்பி’ விருது



இன்று மயிலை, பாரதிய வித்யாபவனில் உறவுச் சுரங்கம், பாரதிய வித்யாபவன், கிருஷ்ணா இனிப்பகம் மூன்றும் இணைந்து நடத்திய ‘சிகரத்தைத் தொட்ட சிவசங்கரி’ நிகழ்வில் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா. முனைவர். வ.வே.சு அவர்களுக்குப் ‘படைப்புலகச் சிற்பி’ விருது வழங்கப் பட்டது. (மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா)
இந்நிகழ்வில் மருத்துவ மாமணி திரு. சொக்கலிங்கம் அவர்கள் ‘காக்க காக்க இதயம் காக்க’ என்னும் தலைப்பில் சிற்றுரை ஆற்றினார். சிற்றுரையா அது? ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைத்தாற் போல பெரிய பயன் தரும் சிறிய உரை.
வாழும் பாரதி இல. கணேசன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். இந்திய நிலவறையில் காசுமீரம் பாகிஸ்தான் இரண்டும் எப்படி இடம்பிடித்துள்ளது என்ற நாற்பதுகளின் வரலாற்றை, ஏசுபிரான் சிலுவையில் மறிக்கவில்லை காசுமீரத்திற்கு வந்து காயத்திற்குப் பச்சிலைகளை எல்லாம் பயன்படுத்தி மருத்துவம் செய்து பிழைக்க வைத்து விட்டனர் என்று தாம் படித்த செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்ற வந்த வ.வே.சு. அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் சிறப்புரையும் சிரிப்புரையுமாகத் தந்து அரங்கத்தைத் தம் கட்டுப்பாட்டில் இருந்து இம்மியும் அசையாமல் இருக்கச் செய்தார். பேரா. வ.வே.சு. அவர்களின் உரையை ஒலிப்பதிவு செய்தேன். எப்போதும் முதல் வரிசையில் அமரும் வழக்கம் இல்லாததால் ஒளிப்பதிவு செய்ய இயலவில்லை. அந்த வருத்தத்துடன்,,,,,,,,,,
சில நிகழ்வுகளில் ஒருவரது உரை நன்றாக இருக்கும். அல்லது இருவரது உரை நன்றாக இருக்கும். ஆனால் இன்றைய நிகழ்வில் எல்லோருடைய உரையும் சிறப்புரைதான் தொகுத்து வழங்கிய பேரா.முனை. உலகநாயகி பழநி அவர்களின் உரை உட்பட........ இது ஒரு வரலாற்று மாலை

Saturday, October 24, 2015

பேக்கரும்பு பெற்றபேறு





                         ஏவுகணை எழுந்ததுஇரா மேசுவ ரத்தில் 
                                   எக்காள மிட்டவரின் இடுப்பொ டிக்க 
                        சாவுகணை வந்ததென்று எதிரி எல்லாம்
                                   சரணடைந்தார் ஆயுதத்தை மூடி வைத்தார் 
                         நோவுகளே தீண்டியவர் இளமை எல்லாம்
                                    நோகாமல் நோற்பதல்ல வெற்றி என்னும்
                          பாவுகளை நீர்நூற்றீர்; படகு ஓட்டும்
                                     பரதவரே! பாரதத்தின் தலைவ ரானீர்!


                           சுக்கலாகச் சிதறவிட்டீர்; பொக்ரான் சக்தி
                                     சோதனையில் வல்லரசு நாட்டை யெல்லாம்
                            கக்கனைத்தான் எளிமை என்பார்; அப்துல்
                                     கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர்
                            நிக்காவே செய்யாமல் பிள்ளை பெற்று
                                       நேசமுடன் வளர்த்திட்ட கணியன் நீரே
                            விக்கலெல்லாம் உம்நினைவைச் சுமந்தே விக்கும்
                                        வீறுகொண்ட இளைஞர்க்கவை விசையாய் நிற்கும்

                             நாளிதழை நீர்சுமந்தீர் நாங்கள் நெஞ்சில்
                                         நாள்தோறும் சுமக்கின்றோம் உம்நி னைவை
                             பாழிதழா உம்இதழ்கள்? தமிழ்ப்பா தம்மை
                                        பாரெல்லாம் பாடிவந்த நெய்தல் பண்ணின்
                             யாழிதலே உம்மிதழ்கள்; புறநா னூறு,
                                         அறநூலாய் நீர்வாழ்ந்தீர்; கொல்லும் நச்சு
                             வேலிதழை ஏந்துகின்ற கால னுக்கு
                                          விருந்தானீர் கதறுகின்றோம் காலா சா!சா!

                            விழலுக்கு நீர்இறைத்தார் பலரும்; நீரோ
                                        விழுதுகளின் விளைச்சலுக்கே நிதம்உ ழைத்தீர்
                            கழலையல்ல உம்சுரப்பு கருணை மாரி
                                        கணைமாரி அணுமாரி பெய்த போதும்.
                            மழலையெல்லாம் மாலையா கிஉம்மைச் சூடும்
                                        மனமாண்பு விதையிட்ட உழவா; எங்கள்
                            சலவையே செய்யாத அழுக்கை எல்லாம்
                                       சஞ்சலமே இல்லாமல் வெளுத்து விட்டீர்

                            நாகரும்பு மனிதர்நீர்: நவின்ற தெல்லாம்
                                        நற்றமிழன் வாழ்முறைக்கு வாக்கு கள்தாம்
                            கைகரும்பு எழுத்தாகப் பதித்த தெல்லாம்
                                        காலத்தை வெற்றிகொள்ளும் புதிய கீதை
                             தேக்(கு)கரும்பு தேகம்கொண்ட தியாகி! தேவ
                                        குழந்தைகளும் காண்பதற்கோ வானம் சென்றீர்?
                             பேக்கரும்பு மணிவயிறு பெற்றபேறு மீண்டும்
                                         பெருமைமிகு கருவானீர் புனித மண்ணில்

- ஆதிரா முல்லை
பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் மறைந்த போது எழுதிய அஞ்சலி கவிதை. வேறு இதழ்களில் வந்து விட்டது என்று கூறிய பின்னும் 4 இதழ்களில் இடம் பிடித்தது இந்தக் கவிதை.
நன்றி...
கவிதை உறவு,
புதுகைத் தென்றல்
உரத்த சிந்தனை
முரசு சங்கமம்