Thursday, June 24, 2010

இவள் தன்மானத் தமிழச்சி....



மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள் உலர்ந்துவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!

பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!

அமுதூறும் செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும் இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!

பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!

தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!

விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!

கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கும் கூர்வேல்தான் தவழுதென்றாள்!

மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!

ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!


6 comments:

  1. இதுதான் கவிதை!
    சும்மா ..தமிழில் புகுந்து
    விளையாடுகிறீர்கள் ஆதிரா அவர்களே!
    ஒவ்வொரு வரியும் தீ!

    "
    சுடரொத்த கண்களுந்தன் கண்களென்றான் -அவளோ
    சுடரென்றால் காற்றினிலே அணைந்திருக்கும்-இதுவோ
    படர்ந்திருக்கும் பகைவர்களின் பசலித்தன வேரறுத்து
    தடையொடித்துத் தூளாக்கும் தன்மானத்தீ என்றாள்!
    "

    ReplyDelete
  2. நன்றி வசந்த்.. தங்கள் வாயால் கவிஞர் என்று அழைக்கப் பட்டதில், தங்கள் கையால் கவிஞர் என்று பொறிக்கப் பட்டதில் பெருமிதம் கொள்கிறேன்.
    மிக்க நன்றி.. மீண்டும்..தங்களின் வருகையை எதிர் நோக்கி..என்றும்..அன்புடன்..

    ReplyDelete
  3. "
    //சுடரொத்த கண்களுந்தன் கண்களென்றான் -அவளோ
    சுடரென்றால் காற்றினிலே அணைந்திருக்கும்-இதுவோ
    படர்ந்திருக்கும் பகைவர்களின் பசலித்தன வேரறுத்து
    தடையொடித்துத் தூளாக்கும் தன்மானத்தீ என்றாள்!//
    கவிதையால் கவிதையை (என்னை) பாராட்டிய அன்பு உள்ளத்திற்கு என் மனமார்ந்த நன்றி.அண்ணாமலை அவர்களே.. தங்கள் கவிதையில் இன்னும் தீப்பொறி பறக்கிறது என் கவிதையை விட.. தங்கள் போன்றோரின் ஊக்கம் என்னையும் சிறு பிள்ளைத்தனமாக எதை எதையோ கிறுக்கச்செய்கிறது.. இந்தக் கிறுக்கலையும் படித்து ஊக்கப் படுத்தும் அன்புக்கு மீண்டும் மிக்க நன்றி..என்றும் இதே எதிர்பார்ப்புடன்..
    "

    ReplyDelete
  4. கவிதையில் தன்மானத் தமிழச்சி என்று தலை நிமிர்ந்தீர்கள்...
    பின்னூட்டத்தில் தன்னடக்கமான தங்க தமிழச்சியாய் தலை குனிந்தீர்கள்...

    வாழ்த்துகள் கவிதைக்கும்...பண்பிற்கும்...

    ReplyDelete
  5. எல்லாம் இரண்டிரண்டாவது உலக நியதி வாசன். நன்மை தீமை, உண்மை பொய் என்பது மென்மையும் வன்மையும், தண்மையும் வெம்மையும் பெண்களின் இயற்கை...நான் மட்டும் விதி விலக்கா என்ன?
    தாங்கள் கவிதை, பின்னூட்டம் இரண்டையும் படித்து கவிதைக்கு மட்டுமன்றி என் மறுமொழிக்கும் பின்னூட்டம் இட்டுள்ள உங்கள் அன்புக்கு நன்றியுடன் தலை வணங்கி...என்றும் தன்னடக்கத்துடன், அன்புடன்..உலகில் உலா வர விரும்பும்..இவள்..

    ReplyDelete