Saturday, July 7, 2012

காதல் குருவி



தாயை
கூட்டில் வைத்து
பொத்திப் பொத்தி
வளர்க்கும்
சின்னக்குருவியாக
நீ

உன்
பிஞ்சு இதழ்
கலந்து  ஊட்டும்
காதலுக்கு
தவமிருக்கும்
தாய்க்குருவியாக...
நான்

காதலில் 
முரண்பாடும்
உடன்பாடோ...



Sunday, July 1, 2012

உறங்காத அந்த விடியல்


வண்ண வண்ணமாக
கண்களில் வந்து போகும
கோல
கலர்க் கனவில்
உறங்காத
அந்த விடியல்

சாணி வாசம்
சுகந்தமாய் வீசும்
குளிர்ச்சியான
மண் தரை

போட்டி போட்டு
பூசனிப் பூவை
சாணியில் நட்டு வைக்கும்
அம்மாவின் கோலம்

குளித்தவுடன்
வாஞ்சையாய்
அழுத்தி அழுத்தி
தலையைத் துவட்டிவிடும்
அப்பாவின்  வாசம்


புதுப்பாவாடை
குடை விரிக்க
நமஸ்காரம் செய்தவுடன்
தொட்டு விடாமல்
எட்ட நின்று
காசு கொடுக்கும்
பாட்டியின் ஆச்சாரம்


கருகும்
மஞ்சள் கொத்தின்
மணத்துடன்
பொங்கலோ பொங்கல்
சொன்ன உற்சாகம்


பிடிவாதமாய்
சர்க்கரை
பொங்கலை மட்டும்
தின்று
நிரம்பிய வயிறு

ஆஹா.....
எல்லாம் இனிமையாக
நினைவுகளில்!
ப்ச்
ஏக்கம் நிஜத்தில்!!



Tuesday, June 26, 2012

எனக்கான சவப்பெட்டி


எனக்கான
சவப்பெட்டியைத்
தினம் தினம்
வெவ்வேறு
வடிவில்
உருவாக்குகின்றன
உன்
நினைவுகள்

நீ - நான்


நீருக்குள் 

வீசிய 


வெடி குண்டாக


இதயத்தின் 


ஆழத்தில்


நீ 



வெடித்துச் 

சிதறியதோ

நான்!




Monday, June 25, 2012



மீனாகப் பன்றியாக மிதக்கின்ற ஆமையாக
மேலான அவதாரங்கள் - பத்தும்
தேனாக இனிக்கிறதாம் தேடுகின்றேன் அவற்றுள்ளே 
தெய்வப்பெண் ஒன்றில்லையே
வீணான ஆதிக்க எண்ணத்தால் பெண்ணினத்தின் 
வேரறுத்துப் போட்டனரே 
ஆனாலும் தாய்தெய்வம் அன்புதனை சுமந்திங்கு 
ஆறாகப் பாய்கின்றதே

Saturday, June 23, 2012

தாய்


காரை மண் சிமெண்ட் அடிக்கல் இன்றி
கால்கள் இரண்டில்
கருவறை சுமந்து
காதல் குழந்தையை
கடவுளாக்கி
ஒன்பது மாதம்
உதிர நெய்யும்
உயிர்மலர்ப்பூவும்
உணர்வுடன் பெய்து
வேள்வி நடத்தும்
ஒப்புயர்வில்லா
ஒருதனி பக்தை

தாய் 

Tuesday, June 19, 2012

தொலைதூர நண்பன்!




உடைந்து
நொறுங்கும் போதெல்லாம்
அள்ளியெடுக்க
உன்
கரம் வேண்டும்
என்னருகில்!

இமைக்கரை
உடையும் போதெல்லாம்
அணை போட
உன்
சுட்டுவிரல்
வேண்டும்
என்னருகில்!

துவளும் போதெல்லாம்
சுகமாகச்
சாய்ந்து கொள்ள
உன்
உன் தோள் வேண்டும்
என்னருகில்!

என்றாலும்
என்றென்றும்
என்
தொலைதூர
நண்பனாக
நீ வேண்டும்!
 

Friday, June 15, 2012

மரணித்தும்


கண்டவர் விண்டதில்லை
விண்டவர் கண்டதில்லை
என்று
கூறுவதெல்லாம்
சுத்தப் பொய்
உன்
வார்த்தைகளின்
மெளனத்தால்
மரணித்தும்
உயிர்த்திருக்கிறேனே!

அவனுக்கு அவள்





அகோரப் பற்களுடன்
நீண்ட நாவுடன்
கைகளில்
சூல்மும்
கத்தியும்
ஈட்டியும்
உடுக்கையும்
இல்லாத
அழகான
காளியாகக்
காட்சியளிக்கிறாள்
அவனுக்கு
அலுவலகத்தில்
மேலாளர் 
இருக்கையில்
அமர்ந்திருக்கும்
அவள்














Saturday, June 9, 2012

சவங்கள்!




என்றோ
மாய்ந்து போன
காதலின்
சுவடுகளை
சவக்குழியில்
புதைக்க நினைக்கிறேன்.


அறிவுப் பாடையில்
அரங்கேறிய
ஆயிரமாயிரம்
அணுக்களில் இருந்தும்
பிடுங்கி எடுத்த
நினைவின்
நீண்ட நெடிய
கடைசி
 ஊர்வலத்திற்கு


இதயம்
அடிக்கிறது
தாரை தப்பட்டை
கண்கள்
கன்னத் தெருவெங்கும்.
மத்தாப்புப்
பூக்களை
உதிர்க்கிறது


நாவின்
புலம்பல்
நர்த்தனத்துடன்
இறுதிச்சடங்கு
நடக்கிறது


என்னுள்ளிருந்து
இடம்பெயர்ந்தது
அந்த நாட்கள்
என்றிருக்கும்போது


பிரேதப்
பரிசோதனைக்காகத்
தோண்டி எடுக்கப்படும்
பிணங்களாய்
மீண்டும்
மெல்ல மெல்ல
மேலெழுகின்றன
நினைவுச் சவங்கள்!





ஆசை முகம் மறந்து போச்சே.... மகா கவியின் அழகான காதல் பாடல்

Thursday, June 7, 2012

ஆங்கில மோகம்


அரிச்சுவடியில்
அழகாய்
சிரிக்கும்
அம்மா
நேரில்
அடிக்க வருகிறாள்
அம்மா என்றதால்!





Sunday, June 3, 2012

தமிழின் தலைமகனுக்கு ஒரு வாழ்த்து


கல்லணை தந்தான் சோழன்
கனித்தமிழ் செழிக்க மேடை
சொல்லணை தந்தாய் நீதான்
சுவையணை வரியில் வைத்தாய்
பல்லணை பயிர்க்குத் தந்தாய்
பழந்தமிழ் நீயே காத்தாய்
நெல்லணை தஞ்சை வளத்தை
நிதம்நிதம் நாட்டில் வார்த்தாய்

அஞ்சுகத் தாயின் மைந்தா
ஐம்முறை ஆட்சி கண்டாய்
நஞ்சிடும் வைதீ கத்தின்
நரம்பினை அறுத்துச் சாய்த்தாய்
கொஞ்சிடும் ச்ங்கப் பாட்டைக்
குப்பனும் கேட்க வைத்தாய்
அஞ்சிடும் பெரியார் தொண்டின்
அனலென பகையைத் தீய்த்தாய்

அண்ணனின் கொள்கை காத்தாய்
அவர்புகழ் உலகு சேர்த்தாய்
தென்னவர் பண்பாட் டுக்குக்
திருக்குறள் கோட்டம் கண்டாய்
கண்ணகி சிலம்பைக் காட்டும்
கடற்கரை சிலையை வைத்தாய்
தண்டமிழ் தலைவா நீயும்
தரைகடல் காலம் வாழ்க!






Friday, June 1, 2012

மின்னல் வெட்டி இதயம் கிழிகிறதே!!!



மேகத்துக்குள்
ஒளிந்திருக்கும்
மின்னல் வெட்டி
வானம்
கிழிவதில்லை

உன்
இமைகளுக்குள்
ஒளிந்திருக்கும்
மின்னல் வெட்டி
இதயம்
கிழிகிறதே
எப்படி?

Thursday, May 31, 2012

அல்லியைப் பார்த்து நிலவு மலர்கிறது..


நிலவைப் பார்த்து
அல்லி மலரும்
என்பார்கள்

இங்கு
கால் முளைத்த
இந்த
அல்லியைப் பார்க்க
நிலவு மலர்ந்துள்ளது!!

Monday, May 28, 2012

ஏமாற்றிச் சென்றது ஏன் ஆண்மழையே


சொல்லாமல் கொள்ளாமல் வந்தாய்
கண்களில்
கன்னங்களில்
இதழ்களில்
பரவசமாய்
குளிர் முத்துக்களைப்
பதித்தாய்
இனிக்கும் ஈரச்சுவை
இன்னும் இன்னும் என்று
ஏங்கி நிற்கையிலே
ஏமாற்றிச் சென்றது ஏன்
ஆண்மழையே
நீயும் என் காதலனாய்




Thursday, May 24, 2012

ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன்!




தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும் 
குருதியில் வளராத
இரத்த உறவே


முந்நூறு நாட்கள்
கருவறை தவம் 
செய்யவில்லை
மூன்றே நொடியில்
முழுவதுமாக
முத்துப் பிள்ளையை
ஈன்றெடுத்த 
நிகழ் யுகக் 
குந்தி நான்


அவளைப் போல
எவரும அறியாமல்
பெட்டியில் வைத்து
நதி நீரில் விட்டுவிட
நான் தயாரில்லை


நீ மட்டுமே அறிய
மனப்பெட்டியில்
உனை வைத்து
அடை காக்கிறேன்
என் நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்



Sunday, April 15, 2012

ஒரு தாயின் ஜனனம்



http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP
உன் சுவாசத்தில்
பிரித்தெடுத்தெடுத்தேன்
தொலை தூரத்தில் இருந்தும்
உன் மனத்தின்
ஏக்கங்களை

உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா
என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி
என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று

உன் மனமே புரியாத உனக்கு
என் மனம் எப்படி புரிந்தது?
நான் ரகசியமாக இருக்கவே
விரும்புகிறேன் என்கிறாயே.

என்னை 
தாயாகத் தத்தெடுத்த 
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உன் பயணத்தில
என் 
வாழ்வின் எல்லை வரை!

Saturday, November 19, 2011

உருப்பட எத்தனிக்கையில்...

http://cdn1.wn.com/pd/99/13/59aaa0ebc89248e982e9515fa5d9_grande.jpg

பாசப் பள்ளத்தில் சறுக்கி

ஆசை மேட்டில் இடறி

கோப மலை முகட்டில் முட்டி மோதி,

சிற்றின்பச் சாக்கடையில் மூழ்கி

அனுபவச் சக்கரத்தில்

  குயவனின் கைப்பட்ட

களிமண்ணாய்

வளைந்து நெளிந்து

முழுவதுமாக

உருப்பட எத்தனிக்கையில்

முடிந்தே விடுகிறது 

வாழ்க்கை

Tuesday, October 25, 2011

இனிய ஒளித் திருநாள் வாழ்த்துகள்

வாழ்க்கை வழியில்
தீப ஒளியுடன் 
அறிவொளியும்
ஆன்ம ஒளியும்
அணிவகுத்திட
துன்பம் துவள
இன்பம் தவழ 
இனிமை மட்டும் கண்டிடுவீர்
என்று
என் வலைப்பூ
பூத்துக்குலுங்க
வாழ்த்து நீர் பாய்ச்சும்  
வசந்தகால
மேகங்களை
இனிய ஒளித் திருநாளில்
வாழ்த்தும் 
அன்பு உறவு
உங்கள்
ஆதிரா

Saturday, August 20, 2011

புறக்கணிப்பு!!!



நண்பனே!
என் இல்லக்
கடவுள் மீது
ஆணையிட்டாய்
புகையைப் புறக்கணிக்க!

தேன்சிந்தும்
என் கன்னத்துச்
செவ்வண்ணத்தின் மீது
ஆணையிட்டாய்
மதுக்கின்னத்தைப்
புறக்கணிக்க!

அட்டையை உரிப்பதாய்
உன்னோடு ஒட்டிய
ஒவ்வொரு
பழக்கத்தையும்
 பிரித்தெடுத்தேன்
லாவகமாக

இன்று
சட்டையைக் கழற்றுவதாய்
என்னை நீ......

யார்மீது ஆனையிட்டாய்
என்னை புறக்கணித்து
நீ வாழ!

Tuesday, May 24, 2011

நறுமுகைக்கு ஒரு சிறு வாழ்த்து.


சின்னஇடைப் பாத்தியிலே சேர்ந்திருவர் பதியமிட்டு
 சிறுமுகையாய் பூத்திட்ட நறுங்குறிஞ்சி தானிவளோ!
கன்னலென கண்டாலே இனிக்கின்ற கனிரசமே!
சிமிழிதழோ செம்பவளம் சிரிக்கின்ற வேளையிலே!

சின்னமென சிவந்தஇரு சிறுகன்னம் சீராக
 வார்த்து வைத்த சீனத்துத் தேன்கின்னம்!
கண்என்ன பார்வேந்தன் தானேந்தும்  வெண்கொற்றக் 

குடைக்குள்ளே குவிந்த இருபொன் மணியோ!

எண்ணமெலாம் ஊறிடுதே ஏக்கத்தின் தேனூற்று
வெள்ளைமொழி கேட்டிடதான் என்றுவரும் காலமென!
தின்னயிலே திகட்டுகின்ற தேன்பாகு நீயல்ல
எண்ணயிலே இனிக்கின்ற தேவாரம் நீகண்ணே!

வண்ணமலர் பூஞ்சிட்டே உன்மூக்கு, ஏக்கத்தில்
உன்அன்னை இழுத்து விட்ட சிறுமூச்சோ!
அன்னைத் தேகத்தின் புதையல்நீ த்ந்தை 
பேகனுக்கே
வரம்தந்த சின்னமயில் நீதானோ!

கைக்கொண்ட அஞ்சுவிரல் செம்பஞ்சு சூரியன்தான்!
கண்கொண்ட சிறுஇமைகள் முடிகொண்ட இருகதவு!
மைகொண்ட விழியாளின் மெய்தந்த அருங்கொடையே
நல்லாண்டு வாழ்ந்திடு நலமோடு வாழ்த்துகிறேன்!


அன்புத்  தம்பி அசுரனின் மகளுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

Saturday, April 16, 2011

முன்னும்..... பின்னும்....

காதலுக்கு முன்....

வாய் உதிர்க்கும்
சப்தங்களுக்கும்
அர்த்தம் புரியாது
அவனுக்கு....

காதலுக்குப் பின்...

அவளின்
மெளனத்திற்கும்
நீண்ட உரை
எழுத முடிகிறது..

Friday, April 1, 2011

“அவன் குடிகாரன்”


எந்தக் கடவுளிடமும்
வரம் ஒன்றும்
கேட்கவில்லை
குடிகாரனாகப்
பிறக்க வேண்டி

 கல்லூரியிலோ
பல்கலைக் கழகத்திலோ
பரிட்சை எழுதி
பெறவில்லை
குடிகாரன்
என்ற பட்டத்தை

கண்டிப்பாக
குடிக்க வேண்டி
நிர்ப்பந்திக்க
காதல் தோல்வியும்
வரவில்லை
கடன் தொல்லையும்
எனக்கில்லை

எந்த மாதுவையும் நான்
நினைத்ததில்லை
அதனால் தானோ
மதுமகள் அன்பாய்
என்னை
அணைத்துக்கொண்டாள்

விலக்க முடியாத
அவள் இரும்புக் கரத்தில்
சிறைபட்டு
தள்ளாடிகொண்டிருக்கிறேன்
“அவன் குடிகாரன்”
என்றநற்சான்றிதழுடன்

நட்புக்குக் துணையாக்
கோப்பைக்குக் கரம் கொடுத்த
ஒரே
காரணத்தால்!!











Tuesday, March 29, 2011

ஆழியின் அலைகளாய்...

http://images2.layoutsparks.com/1/6927/moonlit-sea-night-view.jpg 

முட்டி மோதி
என் இதயக் கரையை
பலவீனமாக்கி இருக்கிறது
எதற்கும் அஞ்சாத
ஆழியின் அலைகளாய்
உன் நினைவுகள

என்று வரும்
ஆழியின்
அடங்கா குமுறல்
என்று அஞ்சும் கரையோர
மகளாய் நான் இல்லை


இதயச சுனாமி
எழும்நாளை எதிர்நோக்கி
அடியோடு
உன் நினைவு சாகரத்தில்
மூழ்கிவிடத் தயாராக..


கடல வள்ளலாய்
கடையெழு வள்ளலாய்
நித்தமும்
உடல் கூட்டில்
உன் இதழ்சிப்பி பிரசவித்த
நித்திலத்தை
நெஞ்சகத்தில் சுமந்தபடி...

Sunday, March 27, 2011

மங்கையும் மனைவியும்



மங்கை
என்ற காரணத்தால்!
இந்திரனின் 
உள்ளச்சிறையில்
அகப்பட்டுக்
கல்லான
அகலிகைக்கு 
உயிர் தந்து
கடவுளானான்!

மனைவி
என்ற காரணத்தால்
இராவணனின்
இல்லச்சிறையில்
அகப்பட்ட
உயிர்ப்பாவை 
மைதிலியை
உயிரோடு கனலாட்டி
கல்லானான்.



ஆதிரா..

Saturday, March 12, 2011

ஏசுவும் என் சீடனே...

http://dl9.glitter-graphics.net/pub/414/414649wfvw09dvvb.gif


பிறந்த போதே
சிலுவையில் அறையப்பட்டேன்
பெண் என்ற காரணத்தல்!


உன் காதல் வெள்ளியின்
கருணை ஒளியால்
உயிர்ப்பு கொண்டேன்!


வரதட்சனை
ஆணிகளால் துளைத்தாய்
எனதுடலை!


இரத்தம் சிந்த
மீண்டும் சிலுவையில்
அறையப் பட்டேன்!


ஏசுவும்
என் சீடன் என்ற
தகுதியையே அடைவான்!


நான் இரண்டாம் முறையும்
சிலுவையில் உயிர்த்தேன்
உயிரோடு உலாவரும்
பிணமாக!




புதுகைத் தென்றல் இதழில் சென்ற ஆண்டு
மகளிர் தினச் சிறப்பிதழில் வெளியானது.
நன்றி புதுகைத் தென்றல்.

Wednesday, January 12, 2011

விடுப்புக் கடிதம்.. விரும்பாமல்..

அன்பான என் உறவுகளே,



என் முனைவர் ஆய்வு முடிவுறும் நிலையில் இருப்பதால் கூடுதல் பணி காரணமாகஉங்கள் அனைவரிடமிருந்து, உங்களின் அனுமதியுடனும் அன்பான வாழ்த்துக்களுடனும் ஒரே ஒரு மாதம் மட்டும் விடைபெறுகிறேன்.
ப்ளீஸ் என்னை மறந்துடாதீங்கப்பா...

மீண்டும்
வரும்வரை பசுமையான நினைவுகளுடன்....

அன்புடன்..
ஆதிரா..

Saturday, December 18, 2010

மரபு..



என்னெனவோ
எழுத நினைக்கிறேன்
சமத்துவத்தைப்
புனையத் துடிக்கிறேன்

கடித்துத் துப்பியதில்
நகங்களெல்லாம் கரைந்து
சதைகளே மிஞ்சின

விரல்களில்
கசிந்த இரத்ததைப்
பார்த்த போது
புரிந்தது
கவிதை எழுதுவதைவிட
சமையல் செய்வது
எளிதென்று

மூவாயிரம் ஆண்டுகளாய்
என்னினத்திற்கென்று
சமைக்கப்பட்டது
அதுதானே!!

Friday, November 26, 2010

தொடரும் சிறை வாசம்....







காற்றில்லா கூட்டுக்குள்
மெட்டில்லா
மெளனப் பாட்டுக்குச்
சிட்டாக ஆடிவரும்
வெண்ப் பட்டுப்பாவைக்கு
நன்பாட்டு ஒன்றிசைக்க
என்றெவர்தான் வருவாரோ?


*****


அன்பு கறைபட்ட போதும்
துன்பச் சிறை பட்ட போதும்
இன்பம் பிறர்க்கென்று ஓதும்
வேதம் அதுதானே 
'பெண்மை'


*****



Tuesday, November 16, 2010

ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்!!

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRcSskAavCWnzhyozMN52blDl2hAH7fPAQk7odecsTechbcGsXm 
உலகெங்கும் வாழும் 
என் அன்பிற்கினிய 
இசுலாமிய உறவுகளுக்கு 
இனிய ஈகைப் பெருநாள் 
வாழ்த்துக்கள்!!


Wednesday, November 3, 2010

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

http://img429.imageshack.us/img429/7582/diwali3500du.jpg 
உலகெங்கும் வாழும் 
தமிழர்கள் அனைவருக்கும், 
அகமும் புறமும் 
அறிவொளியும் 
தீப ஒளியும் பெருகிட  
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

Monday, October 25, 2010

மந்திரம்..

http://www.redbookmag.com/cm/redbook/images/LP/woman-on-floor-writing-1-0110-mdn.jpg
உன்னை உச்சரிப்பதனால்
என் நாவுக்கும்
எழுதுவதால்
என் எழுதுகோல் நாவுக்கும்
ஆனந்தம் அதிகமாவதை
நீ எவ்வாறு அறிவாய்!!




Thursday, October 21, 2010

கல்லல்ல..


http://img522.imageshack.us/img522/3994/vm78.jpg 

சேமிக்க நினைத்த
கனங்களைச் செலவழித்தேன்
தொலைக்க வேண்டிய
தருணங்களை 
நினைவுகளாக்கி
நெஞ்சு கணக்கச் 
சேமித்தேன்

கனங்கள் நழுவி
நாட்களாய்
மாதங்களாய் 
வருஷங்களாய் நீள
நினைவலைகளில்
கரைந்து கொண்டிருக்கின்றது
ஆயுளும்
நீ கொடுத்த உறுதிமொழிகளும்
மெல்ல மெல்ல!

சுகத்தில் அழுவதும்
சோகத்தில் எழுவதும்
கவிதை எழுத்துக்களுக்கு
மட்டுமே சாத்தியம்!

சிதைந்த கணக்கை
வெட்டுவதும்
சீராக்கி ஒட்டுவதும்
கணிப்பொறிக்கு மட்டுமே
கிட்டிய வரம்!

உடைந்த 
இதயச் சில்லுகளைச்
செதுக்கி வார்ப்பதற்கு
நானும் கல்லல்ல,
நீயும் 
கைதேர்ந்த
கணபதி ஸ்தபதி அல்ல!




Wednesday, October 20, 2010

நானும் கல்லல்ல....


சேமிக்க நினைத்த
கனங்களைச் செலவழித்தேன்
நட்டமெனத் தொலைக்க வேண்டிய
தருணங்களை நினைவுகளாக்கி
நெஞ்சு கணக்கச் சேமித்தேன்

கனங்கள் நழுவி
நாட்களாய்
மாதங்களாய் நீள
நினைவலைகளில்
கரைந்து கொண்டிருக்கின்றது
ஆயுள்!
நீ கொடுத்த உறுதிமொழிகளும்
மெல்ல மெல்ல
மூழ்கிக் கொண்டிருக்கிறது

சுகத்தில் அழுவதும்
சோகத்தில் எழுவதும்
கவிதை எழுத்துக்களுக்கு
மட்டுமே சாத்தியம்

சிதைந்த கணக்கை
வெட்டுவதும்
சீராக்கி ஒட்டுவதும்
கணிப்பொறிக்கு மட்டுமே
கிட்டிய வரம்!

உடைந்த சில்லுகளைச்
செதுக்கி வார்ப்பதற்கு
நானும் கல்லல்ல,
நீயும்
கணபதி ஸ்தபதி அல்ல!

Saturday, October 16, 2010

என் இரவு நண்பன்......






இரவு நண்பன் நீ
இனிமைக் கதைகளுக்கும்
இளமைக் கதைகளுக்கும்
கண்ணீரிக் கதைகளுக்கும்
முதலாம் சாட்சி நீ!

ஈருடல் சேரும்
பரவச வேளையில்
இங்கிதம் தெரியா
மனிதர்கள் இவரென்று
முனுமுனுத் திருப்பாயோ?

அங்கத லீலைகள்
அனுதினம் கண்டு
ம்கிழ்ச்சிக் பொங்க
மோன நிலையில்
பூரித்திருப்பாயோ?

மெளன மொழியும்
அறியா உன்னை
மந்திரவாதியாய்
உருவகத்திடும்
அவலம் கண்டு
புழுங்கிச் சாவாயோ?

அழுக்குத் தலையும்
ஈரும் பேணும்
அனுதினம் உன்மேல்
அழுந்துவதனால்
அதிர்ந்து போவாயோ?

அவ்வப்போது மாற்றாவிடினும்
எப்போதாவது சட்டையைமாற்றி
முடை நாற்றத்தின்
மூர்ச்சையில் இருந்து
தெளிய வைப்பார்களா
என்று ஏங்கியிருப்பாயா?

சிவப்பு முக்கோணம்
செய்யும் வேலையைச்
சில நேரங்களில்
செய்வதை எண்ணி
செம்மாந்து இருப்பாயா?

கல்மனக் காரர்கள்
காலுக்குள் போட்டு
மிதிப்பதனாலே
மதிக்கத்தெரியா
மனிதரென்றெண்ணி
மன்னித்திருப்பாயா?

மடியிலுன்னை
சீராட்டுகையிலே
சிந்தனையூற்றாய்
பிராவாகித்து
சீர்கவிதை
பொழிவாயோ?

கட்டில் போரில்
ஆயுதமாகவும்
கேடயமாகவும்
அவதரிப் பதனால்
ஆண்மை கொள்வாயோ?

பஞ்சுப் பொதியே!
எண்ணங்களாகி
பருத்து இருப்பாயோ?
ஓய்வு பெறுமுன்
அனுபவம் கூறி
அமைதி அடைவாயோ?