Sunday, March 21, 2010

பாவியரோ தேவியர்???

















பாவைதனைத் தன்னுடலில் பாதி யாக்கி

சிறைவைத்த பரமன்தனை பாரியென்றால்

இருபாதி இணைந்துவிட்ட ஒருவர் கோலம்

மறுபாதி தியாகத்தின் சின்னமன்றோ?

ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்

ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!

அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று

ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!




ஆயகலை அனைத்துக்கும் தலைவி தன்னை

தூயகலை வெண்கமல வீணையளை

மாயைகளை ஓட்டிவிடும் சோதி யாளை 

நேயமின்றி நாவதனில் சிறைவைத்து

சொல்லுச்குச் சுழல்கின்ற பம்ப ரமாய் 

பல்லுக்குள் ஆடவைத்து பெண்ணை 

எள்மூக்கும் மதியாத நான்முகனை 

தெய்வமெனல் மன்பதைக்கு நேராமோ!




காலமெல்லாம் கடல்மீதில் கழிப்ப தற்கும்

கைநோகக் கால்பிடித்து விடுவதற்கும்

பூதலத்தாள் செல்வம்செய் செய்யவள்தான் சேவகளா?

சிந்தித்துப் பார்ப்பீரே பூதலத்தீர்!

நெஞ்சமதில் சிறைவைத்தான் என்பது அல்லால்

கொஞ்சிநிதம் கால்பிடித்து கரம்பிடித்து

வஞ்சிதனை மெய்சிலிர்க்க விட்டகதை ஒன்றுண்டா

வஞ்சமகன் அவதாரச் சுவடிதனில்?




{இது மூற்றிலும் வேடிக்கையாக சிந்தித்த, ஒரு சிறு பெண்ணியச் சிந்தனை தந்த விளைவே. கடவுளைக் குறைகூறும் (இறை மறுப்பு) சற்றும் இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.}







ஆதிரா..

8 comments:

  1. ஆவ்வ்வ்வ்வ்

    ஆத்தா மகமாயி காப்பாத்து சாமீய்ய் என்னைய

    லெட்டர்ஸ் போல்ட்ல இல்லாம நார்மல்ல எழுதுனா இன்னும் கொஞ்சம் தெளிவா இருக்கும் முடிஞ்சா டெம்ப்ளேட் சேஞ்ச் பண்ணுங்க நேரம் இருந்தா......

    ReplyDelete
  2. அன்புள்ள ஆதிரா,

    குதிரைக்கு கடிவாளம் இல்லையென்றால் போய் சேர வேண்டிய இடம்தன்னை போய் சேருமோ? என்று ஐயம் கொண்டோ, ஆண்டவனும் பெண்ணவளை அடிமையாக்கும் யுக்திதன்னை அன்றே கையில் கொண்டான். ஆண்மகனும் இன்று அதனை கடவுளின் அருள் என்று தொடர்கின்றான். பெண்ணவளும் அதனை மனதில் மகிழ்வென செய்கின்றாள். அதனாலோ நாளும் அவள் மகிழ்கின்றாள்?

    ReplyDelete
  3. தங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி வசந்த். ஃபாண்டை நார்மலில் மாற்றி விட்டேன். மீண்டும் நன்றி.

    ReplyDelete
  4. தங்கள் கருத்து முற்றிலும் உண்மை வாசன்.அடங்கி வாழ்வதிலே ஆத்ம சுகம் அடைபவள் பெண். அன்பால், பணிவிடையால் ஆதிக்கம் பெறுபவளும் அவள். பல நேரங்களில், பல இடங்களில் வஞ்சிக்கப் படுபவளும் அவள். கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி வாசன்.

    ReplyDelete
  5. தங்களின் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை ஆதிரா அவர்களே..

    பெண் என்பவள் ஒரு மாபெரும் சக்தி தான். ஆனால் அந்த சக்தியை இயக்க ஜீவன் என்ற சிவன் வேண்டுமேயொழிய தனித்து இயங்கினால் அது காட்டாற்று வெள்ளம் போல கரை தெறிக்க ஓடி அழித்து விடும் என்பதையும் நினைவில் கொள்தல் வேண்டும்.

    நாவை கட்டுப்படுத்த கலைமகள் நாவில் வீற்றிருக்கின்றாள் என்று சொல்கின்றோமே தவிர நாவில் அவளை நாம் சிறை வைக்க வில்லை.

    பெரியாரின் கொள்கைகள் எல்லோருக்கும் உக்ந்தது அல்ல.
    கடவுளே இல்லை என்றால் உங்களையும், என்னையும் வழிநடத்திச்செல்ல பகுத்தறிவை உருவாக்கியது யார்?

    நன்றி

    ReplyDelete
  6. youre point of view is so different and this poem also so good

    ReplyDelete
  7. நண்பர் சிவாவுக்கு...
    நான் ஒரு இடத்திலும் கடவுள் இல்லை என்ற கருத்தைக் கூறவே இல்லையே..கடவுளரிடமும் ஆணாதிக்கம் இருந்து வந்துள்ளது என்று தான் கூறியுள்ளேன்..அதுவும் ஒரு நகைச்சுவைக்காக என்று பதிவிட்டுள்ளேளே.. கவனிக்கவில்லையா நண்பரே? (நான் அழ்ந்த இறை பக்தியுள்ளவள்..ஆன்மீகமே என்னை வழிநடத்திச் செல்கிறது) என் வலைப்பதிவைப் பார்வையிட்டமைக்கும் அழகாக கருத்து வழ்ங்கியுள்ளமைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. தாமதமான பதிலுரைக்கு வருந்துகிறேன்..மன்னிக்கவும்..

    ReplyDelete
  8. அன்பு அஜித்,
    என் சிறு குடில் நாடி வந்து மாறாத அதே அன்புடன் கருத்து பகரும் தங்கள் அன்புக்கு எப்படி நன்றி கூறுவேன்..அதே அன்பைத் திரும்பச் செலுத்துவதைத் தவிர..என்றும் அன்புடன்..

    ReplyDelete