Sunday, November 17, 2019

கவிஞர் வண்ணதாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து



இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் புத்தகத் திருவிழாவில் சந்தித்துப் பேசியது. கவிஞர் சக்தி ஜோதியின் நூல் உள்ளதா என்று கேட்டு சந்தியா பதிப்பகத்தில் வாங்கிக் கொண்டிருந்தேன். அங்கு வந்த கவிஞர் கல்யாண்ஜி அவர்கள் சக்தி ஜோதியை அலைபேசியில் அழைத்து பேசி நான் நூல் கேட்டு வாங்கியதைக் கூறி என்னிடம் பேச வைத்தார். அப்போதுதான் கல்யாண்ஜி அவர்களோடு எனக்கு நேரடி அனுபவம். ஆனால் சக்தி ஜோதி எனக்குத் தோழிதான்.
இரண்டு ஆண்டுகள் கழித்து சென்ற மாதம் கோவை புத்தகத் திருவிழாவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் தங்கியிருந்த விடுதியில்தான் புலவர் ஷண்முக வடிவேல் ஐயாவும் கல்யாண்ஜி அவர்களும் தங்கியிருந்தார்கள். என்னைப் பார்த்த உடனே சென்னைப் புத்தகத் திருவிழாவில் பார்த்தது, எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பிறகு நீண்ட நேரம் பேசி சிரித்துக் கொண்டு இருந்தோம். என்னை அவர் நினைவில் வைத்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஒரு முறை பார்த்த அளவில் இவ்வளவு நினைவோடு மட்டுமல்ல அன்பையும் காட்ட கவிஞர்களால் தான் முடியும். அதுவும் கல்யாண்ஜி போன்றவர்களால்தான் முடியும். யாரிடமும் பேசுவதற்குத் தயங்குபவள் நான். அவரே அழைத்துப் பேசியது இன்னும் மகிழ்வாக இருந்தது. அன்பாழி கவிஞர் வண்ணதாசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .

No comments:

Post a Comment