Tuesday, May 24, 2011

நறுமுகைக்கு ஒரு சிறு வாழ்த்து.


சின்னஇடைப் பாத்தியிலே சேர்ந்திருவர் பதியமிட்டு
 சிறுமுகையாய் பூத்திட்ட நறுங்குறிஞ்சி தானிவளோ!
கன்னலென கண்டாலே இனிக்கின்ற கனிரசமே!
சிமிழிதழோ செம்பவளம் சிரிக்கின்ற வேளையிலே!

சின்னமென சிவந்தஇரு சிறுகன்னம் சீராக
 வார்த்து வைத்த சீனத்துத் தேன்கின்னம்!
கண்என்ன பார்வேந்தன் தானேந்தும்  வெண்கொற்றக் 

குடைக்குள்ளே குவிந்த இருபொன் மணியோ!

எண்ணமெலாம் ஊறிடுதே ஏக்கத்தின் தேனூற்று
வெள்ளைமொழி கேட்டிடதான் என்றுவரும் காலமென!
தின்னயிலே திகட்டுகின்ற தேன்பாகு நீயல்ல
எண்ணயிலே இனிக்கின்ற தேவாரம் நீகண்ணே!

வண்ணமலர் பூஞ்சிட்டே உன்மூக்கு, ஏக்கத்தில்
உன்அன்னை இழுத்து விட்ட சிறுமூச்சோ!
அன்னைத் தேகத்தின் புதையல்நீ த்ந்தை 
பேகனுக்கே
வரம்தந்த சின்னமயில் நீதானோ!

கைக்கொண்ட அஞ்சுவிரல் செம்பஞ்சு சூரியன்தான்!
கண்கொண்ட சிறுஇமைகள் முடிகொண்ட இருகதவு!
மைகொண்ட விழியாளின் மெய்தந்த அருங்கொடையே
நல்லாண்டு வாழ்ந்திடு நலமோடு வாழ்த்துகிறேன்!


அன்புத்  தம்பி அசுரனின் மகளுக்கு என் அன்பான வாழ்த்துகள்.