Saturday, October 28, 2017

அச்சமும் பொறுப்புணர்வும் நச்சரிப்பு செய்கின்றன







பல நிகழ்வுகளில் பங்கு பெறுகிறோம். சில நிகழ்வுகள் மன மகிழ்வைத் தருகின்றன. சில நிகழ்வுகள் இது போலொரு நிகழ்வுக்கு இனி போகவே கூடாது என்னும் உணர்வைத் தருகின்றன. சில நிகழ்வுகள் மனத்துக்கு நெருக்கமாக வந்து இதமானதொரு உணர்வையும் நெகிழ்வையும் ஏதாவது செய்தாக வேண்டும் என்னும் நச்சரிப்பையும் கொடுத்துக் கொண்டிருக்கும்.
            மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் முதியோர் இருக்கும் அன்பகம் என்னும் காப்பகத்தின் ஆண்டு விழாவுக்குத் தொடர்ந்து ஐந்து அண்டுகளாகக் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்து வாழ்த்துரையும் வழங்கும் வகையில் சென்று கொண்டிருக்கிறேன்.
             அச்சமும் பொறுப்புணர்வும் கூட்டக் கூடிய ஒரு நிகழ்வு சென்ற ஆண்டு ஆண்டு விழாவில் அரங்கேறியது. ஆண்டு மலர் வெளியிட்டார்கள். பிரித்துப் பார்க்கிறேன் என் புகைப்படத்தைப் போட்டுத் துணைத்தலைவர் என்று அச்சிடப் பட்டிருந்தது. திடீரெண்டு அந்த அறிவிப்பை அன்பகத்தின் நிறுவனரும் செயலாளருமான டாக்டர் வீரமணி செய்தார்.
              இந்த ஆண்டு, நீதியரசர் ச. மோகன் தலைமையில் நேற்று நடந்த விழாவில் உடல்நிலை சரியில்லாத நிலையில் நீதியரசர் வந்து கலந்து கொண்டார். தொலைவு ஒன்றரை மணி நேர பயணம். நீதியரசரை நிகழ்வுக்குச் செல்ல வேண்டாம் என்று நானும் அலைபேசியில் அழைத்துச் சொன்னேன். ஆனால் வந்த அவர் பேசும் போதும் அதைக் கூறி இந்த மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் நான் நீதியாக நடந்து கொள்ளவில்லை என்றால் நான் இருந்து என்ன பயன் என்று உணவுப் பூர்வமாக உரத்த குரலில் சிம்மம் போல கர்ச்சித்துக் கூறினார்.
           அவர் பேச்சையும் செயலையும் (உடல்நிலை அவ்வளவு மோசமாக இருக்கும் போது அவ்வளவு தொலைவு பயணம் செய்து வந்தது) 
எதாவது செய்ய வேண்டும் என்னும் எண்ணம் மேலும் மேலும் எழுவதை எத்தனை முறையில் மனத்தை மாற்றினாலும் மாற்றவே முடியவில்லை. என்னால் முடிந்த உதவியை ஆண்டுதோறும் செய்தும் வருகிறேன். அது போதாது.... இன்னும் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மனம் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருக்கிறது.

          அரிமா டாக்டர் ரூபி மனோகரன், அரிமா டாக்டர் மணிலால், அரிமா சந்தானம், கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன், கவிஞர் சிந்தை வாசன் முதலான சான்றோர் பலர் கலந்து கொண்ட நிறைவான விழா.
      நடிகர் கிங்காங்கும் போண்டா மணியும் ஆண்டுதோறும் வந்து அக்குழந்தைகளுக்காகக் கலை நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
                 அன்பகம் நிறுவனர் டாக்டர் வீரமணி அவர்களும் ஊனமுற்றவர். அவரும் அவரது குடும்பத்தாரும் இத்தொண்டிற்காகவே நலமாக வாழட்டும் என்று வாழ்த்தி வந்தேன். வாழ்த்துகிறேன்.

Sunday, October 22, 2017

கனவு தேவதையைக் கண்டேன்

கனவு தேவதையைக் கண்டேன்
*******************************************
என் நீண்ட நாளைய கனவு தேவதை கவிஞர். இரா. மீனாட்சியைக் காணும் பேறு இன்று கிடைத்தது . கையில் ஒரு பையுடன் அமர்ந்திருந்த அந்தத் தேவதையைக் கண்டவுடன் ஓடிச் சென்று பேசினேன். ஒரு ஐந்து நிமிட உரையாடல்தான். என்னைப் பற்றியும் கேட்டுக் கொண்டது. நான் ஆரோவில்லில்தானே எப்போதும் இருக்கிறேன, வாருங்களேன் என்று அன்பழைப்பும் விடுத்தது.
அந்தத் தேவதை இன்று கன்னிமாரா மத்திய நூலகத்தில் நடைபெற்ற பேராசிரியர் இராம. இராமநாதன் அவர்களின் சிலப்பதிகார ஒலிக் குறுந்தகடு வெளியீட்டு விழாவில் வாழ்த்து உரைக்க வந்திருந்தது. வாழ்த்தையும் அழகு ஒளிரும் கவிதையாக வாசித்தது. தேவதையின் அழகைப் போலவே குரலும் இனிமையாக ஒலித்தது.
நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் எழுத்தாளர் சங்கத்தின் எட்டையபுரம் பயணத்திற்கான தொகையைப் பெற்றுக்கொண்டு இருந்தேன்.ஒரே ஒரு நிமிடம்தான். ஒருவர் அம்மா கொடுக்கச் சொன்னார் என்று ஒரு பையைக் கொடுத்தார். எந்த அம்மா என்று நான் திரும்பிப் பார்க்கும் போது அந்தத் தேவதையைக் காணவில்லை. மகா கவிதை இதழ்கள் 4 மற்றும் பேராசிரியர்கள் குறிஞ்சி வேந்தன் & அருணன் இருவரும் இணைந்து பதிப்பித்த தேர்ந்தெடுத்த பாடல்களும் R.S.Pillai அவர்களின் ஆங்கில உரையும் அடங்கிய ‘சிலப்பதிகாரம்’ நூல், ஆரோவில் பற்றிய ஒரு துண்டறிக்கை என்று பையோடு கொடுத்து விட்டுச் சிட்டென்று பறந்தது இருந்தது அந்தத் தேவதை. தேடிக்கொண்டிருந்த தேவதையின் காட்சியைக் கண்ணிரண்டில் தேக்கியிருந்த மகிழ்விலும் தேவதையின் கைப்பையே வரமாகப் பெற்ற மகிழ்விலும் குறையேதும் இல்லாமல் திரும்பினேன்.
அருகில் இருப்பவர்கள் ஒலிப்பேழை வெளியிட்ட இராம. இராமநாதன், முனைவர் வாசுகி கண்ணப்பன் மற்றும் செம்மொழி மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் முகிலை. இராசபாண்டியன்



Tuesday, October 17, 2017

ஆதிரா முல்லை யின் நேர்காணல் - மக்கள் தொலைக்காட்சியில்..

ஆதிரா முல்லை யின் நேர்காணல் - மக்கள் தொலைக்காட்சியில்...
சற்றேறக் குறைய எட்டு மாதங்கள் (12/02/17/ கழிந்து விட்டன பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தி. இன்னும் பசுமையான நினைவுகள் மனத்தில். அக்கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களின் பாராட்டு மழை இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இப்போது நினைத்தாலும் மகிழ்வையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தும் இப்பன்னாட்டுக் கருத்தரங்கைப் பார் போற்றும் மாபெரும் கருத்தரங்காக ஆக்கிய பெருமை இதில் பங்காற்றிய பாடாற்றிய பலருக்கும் உரியது. மீண்டும் இவ்வேளையில் அவர்களுக்கு நன்றி.
பாருங்கள்..... வாழ்த்துங்கள். மேலும் உற்சாகமாக உழைக்க உதவுங்கள்.......
நன்றி ஜோன்ஸ், மக்கள் தொலைக்காட்சி

https://www.facebook.com/aathiraa.mullai/videos/1783700848338775/

Sunday, October 15, 2017

பதிலிகள்


நேசம் என்பதன் பொருள்
புரிவதாக இல்லை
சரியும் போது
தாங்காத நேசங்கள்
மார் தட்டிக் கொள்கின்றன
நம் நிமிர்தலின் போது
தாழ்வில்
பயத்தோடு இருந்த நேசங்கள்
வாழ்வில்
பரவசப் படுவதாக நடிக்கின்றன
இல்லாத ஒன்று
சொல்லாமல் தெரிந்து விடுகின்றது
என்பதைப் புரிந்தும்
கண்டு கொள்வதில்லை
சில நேசங்கள்
பதிலிகளை எதிர்ப்பார்த்தே
சில நேசங்கள்
பரிகாசம் செய்வதற்கே
சில நேசங்கள்
இன்று நேசமாக இருக்கும் எதுவும்
அன்று நேசமாக இருந்ததில்லை
இருந்தாலும்
நெகிழும் போது விலகி
மகிழும் போது நெருங்கும்
நேசங்களோடும்
முரண்பட முடிவதில்லை
அன்றையும் இன்றையும்
அசை போட்டவாறு
உண்பதைப் போல
உடுப்பதைப் போல
நேசித்தும்
தொலைக்க வேண்டியுள்ளது
நேரம் தவறாமல்

பிரயோகம்



அத்தனையும் முடிந்த பின்பு
தெரிந்து கொள்கிறோம்….
நட்பு பகை
மேலதிகாரி கீழதிகாரி
இலக்கியவாதி பொதுநலவாதி
உற்றார் மற்றார்
உரார் உறவார்
மாற்றார் அயலார்
அக்கம் பக்கம்
அனைவருக்கும் தேவைப்படுவது
புகழ் மொழி
சொற்களை
மூட்டைக்கட்டிக் கொண்டு
முகம் பார்த்து
காலமறிந்து
அவிழ்த்துக் கொட்டி விட்டால்
எத்தனை கம்பீரமானவர்களையும்
வீழ்த்தி விடலாம்
சொல் ப்ரயோகம் தெரிந்தவர்கள்
வாழ்ந்து விடுகின்றார்கள்
சொற்களை ஏவ முடியாதவர்கள்
வீழ்ந்து விடுகின்றார்கள்
அத்தனையும் முடிந்த பின்பு
தெரிந்து கொள்கிறோம்….

மெளனமாய் இன்னும் மெளனமாய்....

Tuesday, August 29, 2017

ஆதி விருது பெற்ற இனிய தருணம்


வின் தொலைக்காட்சியின் ஆதி விருதினை உங்கள் ஆதிரா பெற்ற இனிய தருணம்.
நன்றி டாக்டர் தேவநாதன் யாதவ்
திரு குணசீலன்


Sunday, June 25, 2017

ஆண்மையில் பெண்மை


தான் சுகித்த
மலர்களின்
மழலைகளைக்
கால்களில்
சுமந்து சென்று
வளர்க்கும்
பேரன்பு
தும்பிகள்
ஆண்மையின் அடையாளம் அல்ல
தாய்மையின் நிரூபணம்

Thursday, June 22, 2017

குழந்தைகளற்ற வெறுமையில் தட்டான்கள்


துரத்திப் பிடிக்கவும்
வால் பிடித்து சீண்டவும்
சிறகுகளைப் பிடித்து
உள்ளங்கையில்
சிறைப்படுத்தவும்
குழந்தைகளற்ற
வெறுமையில்
பறந்து கொண்டிருக்கின்றன
மழை காலத்துத்
தட்டான்கள்!

Saturday, June 3, 2017

‘ஆதிராவின் கவிதை உலகம்’ - பேராசிரியர். முனைவர். இரா.மோகன் - மதுரை



என் கவிதை உலகினைத் தம் பொற்கரங்களால் வரைந்துள்ளார் - மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் தமிழியற்துறை முன்னைப் பேராசிரியர் இரா. மோகன் அவர்கள்
***************************************************************************************
என் கவிதை நூலுக்கு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் முன்னைத் தகைசால் பேராசிரியர் முனைவர். இரா.மோகன் அவர்களின் அழகான கருத்துரை.
18/01/2017 அன்று உலகத்தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டு நானும் கட்டுரை வாசித்தேன். அப்போது என் கவிதை நூலினை, பேராசிரியர் இரா.மோகன் அவர்களிடம் கொடுத்தேன். அந்த விழாவினை
உலகத்தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து வடிவமைத்தவர் அவர்தான்.
பெரும்பான்மையினர் நூல் கொடுத்தால் வாங்கி பிறருக்கு அன்பளிப்பாகக் கொடுப்பர். இல்லாவிட்டால் வீட்டு நூல் அடுக்கில் அதுவும நூல்களோடு நூலாக ஒளிந்து கொள்ளும். ஆனால் பேராசிரியர் மோகன் ஐயா அவர்கள் உடனடியாகப் படித்து அந்நூல் குறித்து தம் பார்வையை ‘ஆதிராவின் கவிதை உலகம்’ என்று தலைப்பிட்டு எழுதி எனக்கும் ஒரு சிற்றிதழ்களுக்கும் அனுப்பி உள்ளார். அக்கட்டுரை தமிழ் ஆர்த்தர்ஸ்.காம் என்னும் வலைத்தளத்திற்கும் அனுப்பி உள்ளார். அலைபேசியில் அழைத்து மகிழ்ச்சி பொங்கும் குரலில் “நூலினைத் திறந்து பார்த்தேன், உடனே எழுது என்று நான்கைந்து கவிதைகள் என்னை அழைத்தன. எழுதிவிட்டேன் என்று என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
நினைத்துப் பார்க்காத அளவுக்கு அழகான உலகமாக என் கவிதை உலகத்தைத் தங்கள் கரங்களால் வரைந்துள்ளீர்கள். தங்கள் பொற்கரங்களால் உச்சி முகரப் பட்ட இத்தருணம் என் வாழ்வில் மறக்க இயலாத பொன்னான தருணம். இந்தத் தருணத்தை சாத்தியப் படுத்திய, தங்கள் அன்புக்கு ஈடாக என்ன செய்ய இயலும் இந்தச் சின்னவளால் என்று தெரியவில்லை. அன்பைத் தவிர வேறு எது அன்புக்கு ஈடாக இருக்க இயலும். என் மனம் நிறைந்த அன்பையும் நன்றியையும் மலர்களாக்கி அனுப்பியுள்ளேன். மனம் நிறைந்த நன்றிகள் ஐயா

கட்டுரையைக் காண இங்கே சொடுக்கவும்.




Saturday, April 29, 2017

இலக்கியம் எப்போதும் இன்பம்


நேற்று (29.04.17) புதுவையில் நடைபெற்ற புரட்சிக் கவிஞரின் பிறந்தநாள் விழா, டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா மற்றும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் புதுவைக் கிளை தொடக்க விழா ஆகியவை புதுவைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
புவைக் கிளையை இலக்கிய வள்ளல் மாம்பலம் ஆ. சந்திரசேகர் திறந்து வைத்தார். எழுத்தாளர்கள் சங்கத்தலைவர் நல்லாசிரியர் கோ.பெரியண்ணன் தலைமையில் செயலாளர் இதயகீதம் இராமானுசம் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். பொருளார் புலவர் இராமமூர்த்தி, இணைச்செயலாளர் ப.கி.பிரபாகரன், நான், வே. சேகர் ஆகியோர் வாழ்த்திப் பேசினோம். பிறபகல் நிகழ்ச்சியாக கலைமாமணி கோனேரி பா. இராமசாமி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. அதிலும் கவிதை பாடினோம். நிறைவாகவும் பயணாகவும் இருந்தது.
இலக்கியம் எப்போதும் இன்பம்.


















Friday, April 7, 2017

சூறையாட்டு......



ஒரு காதல் சூறயாடப் படுகிறது
இனி இது போல 
எப்போதும் நடந்துவிடக் கூடாது
என்று
வார்த்தைகள் தூவுகின்றன
வாய்கள் எல்லாம்

ஜன சந்தடியில்
கசங்கி, நிறமிழந்து
மெல்ல மெல்ல மடியும்
மயானப் பாதை
மலர்களைப் போல
மறுநாளில் அல்லது அடுத்த நாளில்
அவ்வார்த்தைகள் மடிந்து விடுகின்றன
அக்காதலின் சமாதியோடு

மீண்டும் அதே போல
அடுத்தொன்று…..
அப்போதும்
வெவ்வேறு வண்ணங்களில்
தூவப் படுகின்றன
மயானப் பாதை மலர்கள்

கொஞ்சம் இடைவெளி விட்டு
இன்னொன்று…..
அப்புறம் மற்றும் ஒன்று
அப்புறம் வேறு ஒன்று
இப்படியே தொடர்கிறது….
காதல் சூறையாடல்களும்……
தூவப் படும்
மயான மலர்களும்
சாதிக் கடவுளர்களுக்காக..

ஒவ்வொரு காதல்
சூறையாடப் படும் போதும்
காதலர் பெயருக்கேற்ப
மாற்றம் பெறுகின்றன
சூறையாட்டின் பெயர்களும்
சாதிக்கொலை
கெளரவக் கொலை
ஆணவக் கொலை
என்று……

நல்ல வேளை
முதல் காதலர்
ஆதாம் ஏவாள் காலத்தில்
நாம் இருந்திருக்கவில்லை
இருந்திருந்தால்
சூறையாடி இருப்போம்
ஏதேனும் ஒரு பெயர்
வைத்து
அந்தக் காதலையும்!

- ஆதிரா முல்லை.

(கவிதை உறவு மாத இதழில் இடம்பெற்றது.
நன்றி கவிதை உறவு)

Sunday, March 12, 2017

பாடலாசிரியராகிறார் - கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா




கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் அழைப்பின் பேரில் இணையதளம் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவுக்குச் சென்று வந்தேன். திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இசைப்பேழையை வெளியிட்டார்.

இணையதளத்தின் இனிமை மற்றும் கொடுமை இரண்டையும் மையமாக வைத்து சங்கர் & சுரேஷ் இரட்டையர் (Not Twins; They are Friends) இயக்கத்தில் இயக்கப் பட்ட ஒரு திகில் திரைப்படம். இப்படத்தின் வசனத்தையும் பாடல்களையும் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் எழுதியுள்ளார்கள்.

‘வாடா வாடா நம்ம ஊரு டீமு டீமு’ ஷேர் பண்ணி தருவது மாமூ மாமூ” என்ற பாடல் கோவை திரைப்பட டீமுக்குப் பெயர் பெற்றுத் தரும் குதுகலக் குத்துப் பாடல். இளைஞர் அரோல் கொரோலி இசையில் அமைந்துள்ள இப்பாடல் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் இளமைக்கும் சான்று.

“விட்டு விட்டு ஒலிக்குதடா வீணை நாதம்; தொட்டுத் தொட்டுப் பழகட்டும் தோடி இராகம்” இப்பாடல் வார்த்தைகள் தெளிவாக இசைக்குள்ளிருந்து பழமையையும் மரபையும் போர்த்திக்கொண்டு பழகுதமிழ் இனிமையோடு இதமாக வெளிவருகிறது.

“நீலம் தூங்கும் வானில் நிலவின் அசைவுகள்; நீலம் பூத்த கண்ணில் கனவின் கசிவுகள்” என்னும் சோக ராகம் சோகத்தோடு இலக்கிய ரசனையான வார்த்தைகளையும் சுகமான இசையையும் சுமந்து நாற்பதுகளை அவர்களின் நினைவுகளை பதமாக அசை போட வைக்கிறது.

“திரிசங்கு சொர்க்கம் இதுவா? விடை சொல் விஸ்வாமித்ரா” என்று உச்சஸ்தாயியில் வினா எழுப்பி, சுருங்கிப் போனது பூகோளம்; சுறுசுறுப்பானது பூலோகம்; விரல்களின் நுனியில் வையகம் முழுவதும் அடங்கி விடும் இணையதளம்” என்னும் பாடல் கதைக்கருவைச் சுமந்து அசாதரனமான இசையோடும் அழுத்தமான கேள்விகளோடும் சிந்திக்க வைக்கிறது. பால்வெளி மீதினில் படுக்கையைப் போட்டது இணையதளம் போன்ற வரிகளாலும் இப்பாடல் பால்வெளி வரை கொட்டி முழக்கும் வெற்றிப் பாடல் என்பதைச் சொல்கிறது.

நான்கு பாடல்களும் இசை, எழுத்து, காட்சி என எத்தரப்பிலும் ஏற்றம் பெற்றுள்ளன.

பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கவும் திரு மரபின் மைந்தன் அவர்கள் திரைத்துறையிலும் முத்தாக ஒளி வீசவும் எம் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
இணையதளம் இதயங்களை இணைக்கும் இனிய தளமாக வெற்றி பெறட்டும். வாழ்த்துகள்.

எஸ்.பி.முத்துராமன் அவர்கள் வரும்போது வழியில் நின்றிருந்த நான் அவருக்கு வணக்கம் சொன்னேன். வழக்கம் போல ஆதிரா வாங்க என்றழைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இலக்கியக் கூட்டத்தில் எப்போதும் பார்க்கும்போதெல்லாம் புகைப்படம் எடுப்பது எங்கள் வழக்கம். இந்தத் திரைப்படக் கலைஞர்களால் சூழப்பட்ட எனக்கு அந்நியமான கூட்டத்தில் நாகரிகம் கருதி நான் உள்ளே நகர்ந்தேன். ஆனாலும் அவரது பெருந்தன்மை இது. எப்போதும் சிலிர்க்க வைக்கும் அன்பு ஐயா எஸ்.பி.முத்துராமன் அவர்களது. பழகும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.

Thursday, March 9, 2017

‘ஆதி’ விருது உங்கள் ’ஆதி’(ரா)க்கு.......








^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இன்று (08/03/17) உலக மகளிர் தினத்தில் வின் தொலைக்காட்சியின் ‘ஆதி’ (யாதுமாகி நின்றாய்) சாதனையாளர் விருது உங்கள் ஆதிராவுக்கு........
லக்‌ஷ்மன் ஸ்ருதி இன்னிசை மழையில்... சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரசுவதி ராஜாமணி, இலக்கியவாதியும் காவல்துறை அதிகாரியுமான திருமதி திலகவதி, குமுதம் ஸ்நேகிதி இதழின் ஆசிரியர் திருமதி லோகநாயகி திரு ரூஸ்வெல்ட் ஆகியோர் முன்னிலையில்.....
விருதாளர்களைப் பற்றி ஒளி-ஒலிப்பதிவு செய்து திறையில் பார்வையாளர்களுக்குப் போட்டுக் காண்பித்தது பெருமை. விருதாளர்களுக்கு, இருக்கையில் தொடுத்த மல்லிகைச் சரம் கொடுத்து உபசரித்தது புதுமை. மிக ருசியான உணவுடன் மிக உயர்ந்த உபசரிப்பு அருமை.......
வின் தொலைக்காட்சி நிறுவனர் திரு. தேவநாதன் யாதவ் மற்றும் செயலாளர் திரு. குணசீலன் இருவருக்கும் நன்றி

Sunday, February 5, 2017

பன்னாட்டுக் கருத்தரங்கம்

தமிழ் நெஞ்சங்களுக்கு,
12.02.17 ஞாயிற்றுக்கிழமை ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ள பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கு பெற அன்போடு அழைக்கிறேன். தங்கள் வருகை எங்கள் உவகை. வாருங்கள் தமிழ் அமுது பருக!