Saturday, November 19, 2011

உருப்பட எத்தனிக்கையில்...

http://cdn1.wn.com/pd/99/13/59aaa0ebc89248e982e9515fa5d9_grande.jpg

பாசப் பள்ளத்தில் சறுக்கி

ஆசை மேட்டில் இடறி

கோப மலை முகட்டில் முட்டி மோதி,

சிற்றின்பச் சாக்கடையில் மூழ்கி

அனுபவச் சக்கரத்தில்

  குயவனின் கைப்பட்ட

களிமண்ணாய்

வளைந்து நெளிந்து

முழுவதுமாக

உருப்பட எத்தனிக்கையில்

முடிந்தே விடுகிறது 

வாழ்க்கை

Tuesday, October 25, 2011

இனிய ஒளித் திருநாள் வாழ்த்துகள்

வாழ்க்கை வழியில்
தீப ஒளியுடன் 
அறிவொளியும்
ஆன்ம ஒளியும்
அணிவகுத்திட
துன்பம் துவள
இன்பம் தவழ 
இனிமை மட்டும் கண்டிடுவீர்
என்று
என் வலைப்பூ
பூத்துக்குலுங்க
வாழ்த்து நீர் பாய்ச்சும்  
வசந்தகால
மேகங்களை
இனிய ஒளித் திருநாளில்
வாழ்த்தும் 
அன்பு உறவு
உங்கள்
ஆதிரா

Saturday, August 20, 2011

புறக்கணிப்பு!!!



நண்பனே!
என் இல்லக்
கடவுள் மீது
ஆணையிட்டாய்
புகையைப் புறக்கணிக்க!

தேன்சிந்தும்
என் கன்னத்துச்
செவ்வண்ணத்தின் மீது
ஆணையிட்டாய்
மதுக்கின்னத்தைப்
புறக்கணிக்க!

அட்டையை உரிப்பதாய்
உன்னோடு ஒட்டிய
ஒவ்வொரு
பழக்கத்தையும்
 பிரித்தெடுத்தேன்
லாவகமாக

இன்று
சட்டையைக் கழற்றுவதாய்
என்னை நீ......

யார்மீது ஆனையிட்டாய்
என்னை புறக்கணித்து
நீ வாழ!

Tuesday, May 24, 2011

நறுமுகைக்கு ஒரு சிறு வாழ்த்து.


சின்னஇடைப் பாத்தியிலே சேர்ந்திருவர் பதியமிட்டு
 சிறுமுகையாய் பூத்திட்ட நறுங்குறிஞ்சி தானிவளோ!
கன்னலென கண்டாலே இனிக்கின்ற கனிரசமே!
சிமிழிதழோ செம்பவளம் சிரிக்கின்ற வேளையிலே!

சின்னமென சிவந்தஇரு சிறுகன்னம் சீராக
 வார்த்து வைத்த சீனத்துத் தேன்கின்னம்!
கண்என்ன பார்வேந்தன் தானேந்தும்  வெண்கொற்றக் 

குடைக்குள்ளே குவிந்த இருபொன் மணியோ!

எண்ணமெலாம் ஊறிடுதே ஏக்கத்தின் தேனூற்று
வெள்ளைமொழி கேட்டிடதான் என்றுவரும் காலமென!
தின்னயிலே திகட்டுகின்ற தேன்பாகு நீயல்ல
எண்ணயிலே இனிக்கின்ற தேவாரம் நீகண்ணே!

வண்ணமலர் பூஞ்சிட்டே உன்மூக்கு, ஏக்கத்தில்
உன்அன்னை இழுத்து விட்ட சிறுமூச்சோ!
அன்னைத் தேகத்தின் புதையல்நீ த்ந்தை 
பேகனுக்கே
வரம்தந்த சின்னமயில் நீதானோ!

கைக்கொண்ட அஞ்சுவிரல் செம்பஞ்சு சூரியன்தான்!
கண்கொண்ட சிறுஇமைகள் முடிகொண்ட இருகதவு!
மைகொண்ட விழியாளின் மெய்தந்த அருங்கொடையே
நல்லாண்டு வாழ்ந்திடு நலமோடு வாழ்த்துகிறேன்!


அன்புத்  தம்பி அசுரனின் மகளுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

Saturday, April 16, 2011

முன்னும்..... பின்னும்....

காதலுக்கு முன்....

வாய் உதிர்க்கும்
சப்தங்களுக்கும்
அர்த்தம் புரியாது
அவனுக்கு....

காதலுக்குப் பின்...

அவளின்
மெளனத்திற்கும்
நீண்ட உரை
எழுத முடிகிறது..

Friday, April 1, 2011

“அவன் குடிகாரன்”


எந்தக் கடவுளிடமும்
வரம் ஒன்றும்
கேட்கவில்லை
குடிகாரனாகப்
பிறக்க வேண்டி

 கல்லூரியிலோ
பல்கலைக் கழகத்திலோ
பரிட்சை எழுதி
பெறவில்லை
குடிகாரன்
என்ற பட்டத்தை

கண்டிப்பாக
குடிக்க வேண்டி
நிர்ப்பந்திக்க
காதல் தோல்வியும்
வரவில்லை
கடன் தொல்லையும்
எனக்கில்லை

எந்த மாதுவையும் நான்
நினைத்ததில்லை
அதனால் தானோ
மதுமகள் அன்பாய்
என்னை
அணைத்துக்கொண்டாள்

விலக்க முடியாத
அவள் இரும்புக் கரத்தில்
சிறைபட்டு
தள்ளாடிகொண்டிருக்கிறேன்
“அவன் குடிகாரன்”
என்றநற்சான்றிதழுடன்

நட்புக்குக் துணையாக்
கோப்பைக்குக் கரம் கொடுத்த
ஒரே
காரணத்தால்!!











Tuesday, March 29, 2011

ஆழியின் அலைகளாய்...

http://images2.layoutsparks.com/1/6927/moonlit-sea-night-view.jpg 

முட்டி மோதி
என் இதயக் கரையை
பலவீனமாக்கி இருக்கிறது
எதற்கும் அஞ்சாத
ஆழியின் அலைகளாய்
உன் நினைவுகள

என்று வரும்
ஆழியின்
அடங்கா குமுறல்
என்று அஞ்சும் கரையோர
மகளாய் நான் இல்லை


இதயச சுனாமி
எழும்நாளை எதிர்நோக்கி
அடியோடு
உன் நினைவு சாகரத்தில்
மூழ்கிவிடத் தயாராக..


கடல வள்ளலாய்
கடையெழு வள்ளலாய்
நித்தமும்
உடல் கூட்டில்
உன் இதழ்சிப்பி பிரசவித்த
நித்திலத்தை
நெஞ்சகத்தில் சுமந்தபடி...

Sunday, March 27, 2011

மங்கையும் மனைவியும்



மங்கை
என்ற காரணத்தால்!
இந்திரனின் 
உள்ளச்சிறையில்
அகப்பட்டுக்
கல்லான
அகலிகைக்கு 
உயிர் தந்து
கடவுளானான்!

மனைவி
என்ற காரணத்தால்
இராவணனின்
இல்லச்சிறையில்
அகப்பட்ட
உயிர்ப்பாவை 
மைதிலியை
உயிரோடு கனலாட்டி
கல்லானான்.



ஆதிரா..

Saturday, March 12, 2011

ஏசுவும் என் சீடனே...

http://dl9.glitter-graphics.net/pub/414/414649wfvw09dvvb.gif


பிறந்த போதே
சிலுவையில் அறையப்பட்டேன்
பெண் என்ற காரணத்தல்!


உன் காதல் வெள்ளியின்
கருணை ஒளியால்
உயிர்ப்பு கொண்டேன்!


வரதட்சனை
ஆணிகளால் துளைத்தாய்
எனதுடலை!


இரத்தம் சிந்த
மீண்டும் சிலுவையில்
அறையப் பட்டேன்!


ஏசுவும்
என் சீடன் என்ற
தகுதியையே அடைவான்!


நான் இரண்டாம் முறையும்
சிலுவையில் உயிர்த்தேன்
உயிரோடு உலாவரும்
பிணமாக!




புதுகைத் தென்றல் இதழில் சென்ற ஆண்டு
மகளிர் தினச் சிறப்பிதழில் வெளியானது.
நன்றி புதுகைத் தென்றல்.

Wednesday, January 12, 2011

விடுப்புக் கடிதம்.. விரும்பாமல்..

அன்பான என் உறவுகளே,



என் முனைவர் ஆய்வு முடிவுறும் நிலையில் இருப்பதால் கூடுதல் பணி காரணமாகஉங்கள் அனைவரிடமிருந்து, உங்களின் அனுமதியுடனும் அன்பான வாழ்த்துக்களுடனும் ஒரே ஒரு மாதம் மட்டும் விடைபெறுகிறேன்.
ப்ளீஸ் என்னை மறந்துடாதீங்கப்பா...

மீண்டும்
வரும்வரை பசுமையான நினைவுகளுடன்....

அன்புடன்..
ஆதிரா..