Saturday, April 29, 2017

இலக்கியம் எப்போதும் இன்பம்


நேற்று (29.04.17) புதுவையில் நடைபெற்ற புரட்சிக் கவிஞரின் பிறந்தநாள் விழா, டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா மற்றும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் புதுவைக் கிளை தொடக்க விழா ஆகியவை புதுவைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
புவைக் கிளையை இலக்கிய வள்ளல் மாம்பலம் ஆ. சந்திரசேகர் திறந்து வைத்தார். எழுத்தாளர்கள் சங்கத்தலைவர் நல்லாசிரியர் கோ.பெரியண்ணன் தலைமையில் செயலாளர் இதயகீதம் இராமானுசம் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். பொருளார் புலவர் இராமமூர்த்தி, இணைச்செயலாளர் ப.கி.பிரபாகரன், நான், வே. சேகர் ஆகியோர் வாழ்த்திப் பேசினோம். பிறபகல் நிகழ்ச்சியாக கலைமாமணி கோனேரி பா. இராமசாமி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. அதிலும் கவிதை பாடினோம். நிறைவாகவும் பயணாகவும் இருந்தது.
இலக்கியம் எப்போதும் இன்பம்.


















Friday, April 7, 2017

சூறையாட்டு......



ஒரு காதல் சூறயாடப் படுகிறது
இனி இது போல 
எப்போதும் நடந்துவிடக் கூடாது
என்று
வார்த்தைகள் தூவுகின்றன
வாய்கள் எல்லாம்

ஜன சந்தடியில்
கசங்கி, நிறமிழந்து
மெல்ல மெல்ல மடியும்
மயானப் பாதை
மலர்களைப் போல
மறுநாளில் அல்லது அடுத்த நாளில்
அவ்வார்த்தைகள் மடிந்து விடுகின்றன
அக்காதலின் சமாதியோடு

மீண்டும் அதே போல
அடுத்தொன்று…..
அப்போதும்
வெவ்வேறு வண்ணங்களில்
தூவப் படுகின்றன
மயானப் பாதை மலர்கள்

கொஞ்சம் இடைவெளி விட்டு
இன்னொன்று…..
அப்புறம் மற்றும் ஒன்று
அப்புறம் வேறு ஒன்று
இப்படியே தொடர்கிறது….
காதல் சூறையாடல்களும்……
தூவப் படும்
மயான மலர்களும்
சாதிக் கடவுளர்களுக்காக..

ஒவ்வொரு காதல்
சூறையாடப் படும் போதும்
காதலர் பெயருக்கேற்ப
மாற்றம் பெறுகின்றன
சூறையாட்டின் பெயர்களும்
சாதிக்கொலை
கெளரவக் கொலை
ஆணவக் கொலை
என்று……

நல்ல வேளை
முதல் காதலர்
ஆதாம் ஏவாள் காலத்தில்
நாம் இருந்திருக்கவில்லை
இருந்திருந்தால்
சூறையாடி இருப்போம்
ஏதேனும் ஒரு பெயர்
வைத்து
அந்தக் காதலையும்!

- ஆதிரா முல்லை.

(கவிதை உறவு மாத இதழில் இடம்பெற்றது.
நன்றி கவிதை உறவு)