Monday, December 26, 2016

பன்னாட்டுக் கருத்தரங்கம்



ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா
ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை
ஆதிரா பதிப்பகம், சென்னை
நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று. அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்!
கருத்தரங்க தலைப்பு: காலந்தோறும் தமிழ்
நாள்: 11/02/17
இடம்: ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி, பள்ளிக்கரணை, சென்னை
கட்டுரை அனுப்ப வேண்டிய மின் முகவரி:
innilaa.mullai@gmail.com
கட்டணம் செலுத்த:
P. BHANUMATHI
SB. 01/011041
012300101011041
CORPORATION BANK
123, CHENNAI KELLY'S CORNER BRANCH
கட்டுரையும் கட்டணமும் செலுத்த நிறைவு நாள் 31/12/16

Sunday, December 11, 2016

மகாகவிக்கு புகழ் அஞ்சலி

மகாகவி சுப்பரமணிய பாரதியாரின் 135 ஆவது பிறந்தநாளில் (11/12/16) சென்னை மெரினாவில் கம்பீரமாக நிற்கும் அந்த மகாகவிக்குப் பாரதியார் சங்கத்து அன்பர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியபோது.. தலைவர் மூத்த வழக்கறிஞர் காந்தி, துணைத்தலைவர் மருத்துவர். மேஜர் ராஜா, செயலாளர் மதிவாணன், பொருளாளர் சோபனாரமேஷ், கவிஞர் நெல்லை இராமச்சந்திரன், வழக்கறிஞர்கள் இராமலிங்கம், சதீஷ் குமார், வசந்தகுமார் முதலானோருடன்...









மும்பை இலக்கியத் திருவிழாவில்... பட்டிமன்றத்தில்...







இல. கணேசன் = இலக்கிய கணேசன்




மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்ட தமிழ் இலக்கியவாதியும் பொற்றாமரை இலக்கிய அமைப்பின் தலைவருமான திரு. இல. கணேசன் அவர்களை அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் அவரது இல்லம் சென்று வாழ்த்து தெரிவித்து வந்தோம்... அடுத்து சங்கத்தின் நிகழ்வுக்காக தேதியும் கேட்டுவிட்டு வந்தோம்.
பொதுச்செயலாளர் முனைவர் இதயகீதம் இராமானுஜம், அவை முன்னவர் அரிமா. திரு. பத்மநாபன் மற்றும் முனைவர். வாசுகி கண்ணப்பன் ஆகியோருடன் நானும்...
அன்பும் கனிவும் நிறைந்த அவரது உபசரிப்பில் மகிழ்ந்தோம். அவரது மேடைப் பேச்சு கேட்டிருக்கிறேன். தனிப்பட்ட முறையிலும் இவ்வளவு இலக்கியமாகப் பேச முடியுமா என்று வியக்க வைத்தார். இலக்கியம் பலர் கூடி மகிழ்ந்து பேசும்போதே சுவை தருகிறது. பன்னோக்குப் பார்வையைத் தருகிறது. அதுவே மகிழ்வான அனுபவமாக இருக்கும் என்று கூறினார்.
எல்லோர்க்கும் இனிப்பு கொடுத்தார்கள். நவராத்திரி என்பதால் எனக்கும் வாசுகி அம்மாவுக்கும் பரிசுப் பொருட்கள் கொடுக்கப் பட்டது. (வேலைப்பாடுகள் அமைந்த அழகான தட்டு, கண்ணாடிகள் எல்லாம் பதித்த அழகான கைப்பை வெற்றிலை பாக்கு இத்யாதிகள் எல்லாம்) எல்லா திருவிழாக்களிலும் பெண்களையே சிறப்பிக்கிறார்கள். ஆகையால் அடுத்த பிறவியில் பெண்ணாகப் பிறக்க வேண்டும் என்று கூறிவிட்டு ஓர் அழகான நகைச்சுவையைக் கூறினார். இப்படித்தான் ஒரு பெண் அடுத்த ஜென்மத்துல நான் கணவனா பொறக்கனும். நீங்க மனைவியா இருக்கனும் என்று சொன்னாளாம். அவளது கணவன் அப்படி நம்பி எதையும் கேட்டுடாதே. நீ இறந்து அடுத்த பிறவி எடுக்க எப்ப்டியும் ஒரு ஐம்பது அறுபது ஆண்டுகளாவது ஆகும். அதற்குள் நிலைமை தலைகீழாக மாறிவிடும். இப்போதே கணவன்மார்கள் வேலை செய்யத் தொடங்கி விட்டார்கள். அப்புறம் அடுத்த பிறவியிலும் நீதான் அல்லல் பட வேண்டுமா என்று யோசித்துக் கொள் என்றானாம். அவர் இதனை அழகு தமிழில் பழகு தமிழில் சொன்னார். மிக நீண்ட கவிதையால் பொதுச்செயலாளர் இதயகீதம் அவர்கள் அவ்ரை வாழ்த்தினார்.
L.G. அவர்கள் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தது............ இப்படியும் பெரிய மனிதர்கள் இருப்பார்களா என்று வியக்க வைத்தது. இருக்கிறார்களே....
நெகிழ்வாகவும் மகிழ்வாகவும் இருந்த தருணம்.. என் நூலையும் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

Sunday, July 3, 2016

கடற்கரைக் கவியரங்கில்....

இன்றைய (03.07.16) 543 வது கடற்கரைக் கவியரங்கில்.... எனக்குத் தலைமைப் பொறுப்பேற்கும் சிறப்பு வாய்த்தது.
அதன் தலைவரும் பொன்விழா ஆண்டில் நடை போட்டுக்கொண்டிருக்கிற முல்லைச்சரத்தின் ஆசிரியருமான கலைமாமணி பொன்னடியான் அவர்கள் என்னை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்கள். சற்று வெட்கமாகவும் இருந்தது. மஞ்சரி இதழில் முன்னாள் ஆசிரியர் லெச்சுமணன் (லெமன்), கவிஞர் முசுறி மலர்மன்னன், கவிஞர் ஜெகதா அய்யாசாமி, கவிஞர் அய்யாசாமி, மற்றும் கவிஞர் பலரும் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி முல்லையின் சரமென அழகும், முத்துகளின் சரமென பயனும் உடையதாக இருந்தது
.
அவ்வளவு பெரிய மனிதர் என்னைப் பார்த்ததும் கவியரங்கின் தலைமை நீங்கள்தான் என்று கூறி அழகாக அறிமுகம் செய்து வைத்தது மகிழ்வாக இருக்கிறது. கலைமாமணி பொன்னடியான் அவர்களுக்கு நன்றிகள் பல....


முல்லைச் சரம் இதழின் பொன்விழா கொண்டாட்டத்தைப் எப்படி நடத்தலாம் என்று பேசிக்கொண்டு இருக்கும்போது...





















Monday, May 30, 2016

என் இரண்டாம் பெற்றோர்

என் இரண்டாம் பெற்றோர்
**************************************
2002 முதல் பதினான்கு ஆண்டுகள் எனக்கு நல்ல ஆசானாக மட்டுமல்லாமல் ஒரு தந்தையாக இருந்து நல்லது எது அல்லது எது என்று எப்போதும் கருணையோடு சுட்டிக் காட்டி வழிநடத்தியவர். பேராசிரியர் சா. வளவன் அவர்கள். என் இளமுனைவர் (M.Phil.), மற்றும் முனைவர் (Ph.D) இரு ஆய்வுக்கும் நெறியாளராக இருந்தவர். ஆய்வை மட்டுமன்றி சொந்த வாழ்விலும் ஒரு தந்தையின் கனிவோடு எப்போதும் ஆற்றுப்படுத்திவர். இரண்டு ஆய்வுகளிலும் முழு சுதந்திரம் கொடுத்த தகை சான்ற பேராசிரியர். எந்த குறுக்கீடும் ஒரு போதும் செய்தில்லை. “மேடையில் பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் எழுதுங்கள். படைப்புகள்தான் காலத்தைக் கடந்து நிற்கும்” என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருந்தவர்.
என்னுடய கட்டுரைத் தொகுப்பு நூலுக்கு “ஐயா வழக்கம் போல வாழ்த்துரை ஒரு நான்கு வரிகளில் தாருங்கள்” என்று கேட்ட போது “ஏன் நூல் தர மாட்டீங்களா? நான் பார்க்கக் கூடாதா?” என்று கேட்டு வாங்கி படித்தார். நான் அவரைப் படிக்க வைத்துத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதால் எப்போதும் நூலைத் தர மாட்டேன். வாழ்த்து மட்டும் கொடுங்கள் என்பேன். உச்சிதனை முகர்ந்தால் என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலுக்கு அணிந்துரை கொடுத்துள்ள ஐயா,
“நான் அவருக்கு இரண்டாம் பெற்றோர். இந்த நூலுக்காக அவரை உச்சி மேல் வைத்து மெச்சிப் பாராட்டி மகிழ்கிறேன்.” என்று எழுதிக் கொடுத்தார். இப்போது விழித்தாரைகளோடு நூறு முறைக்கு மேல் அந்த வரிகளைப் படித்து விட்டேன்.
“மயக்குறு மந்திரா மொழி” என்று தலைப்பை எழுதியதோடு,
“மழலையர் பேசுவதை மயக்குறு மந்திர மொழி என்பர். அவர்தம் மழலை பெற்றோர்க்கு ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தும். அம்மொழியிலேயே ஆசிரியரும் பெற்றோர்க்கு வேண்டிய அறிவுரைகளையும் ஆக்கப் பூர்வமான செயல் ஈடுபாட்டினையும் கூறியிருக்கிறார். நூலின் நடை மயக்குறு மந்திர மொழிகளால் ஆனது என்பதையே இவ்வாறு குறிப்பிட்டேன்” என்று என் மொழி நடையை ரசித்த தந்தை அவர்.
என் பள்ளிப் பருவத்தில் ஒருபக்கம் எழுதிய தாள்களால் ஆன ரஃப் நோட்டைத் தைத்து கொடுப்பார் என் தந்தை. என் கல்வித் தந்தையும் என் ஆய்வுக் காலங்களில் கட்டுக் கட்டாகத் தாள்களைக் கொடுத்து “எழுத இதைப் பயன் படுத்துங்க. பேப்பர் விலைக்கு வாங்காதீங்க” என்பார். எப்போதும் நான் எழுதும்போதெல்லாம் தாள்களில் உங்கள் அன்பு முகத்தைப் பார்ப்பேன் ஐயா. இப்போதும் இனியும் என் எழுத்துகளைத் தாள்களில் வழியாக தாங்கள் ஆசிர்வதிப்பீர்கள்.
தொடர்ந்து உடனிருந்து பார்த்துக் கொண்ட என்னால் (ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது சென்று) என் விபத்துக்குப் பிறகு 20 நாட்கள் பார்க்க முடியவில்லை. 29/04/16 அன்று மனநிலையே சரியில்லை. ஆட்டோவில் சென்று பார்த்து விட்டு வந்தேன். உள்ளே நுழைந்தவுடன் “கை எப்படி இருக்கிறது? இந்த வலியோடு ஏன் வந்தீங்க?” என்றுதான் கேட்டார். எப்படி ஐயா இருக்கீங்க என்று கேட்டவுடன் குழைந்தையைப் போல ஒரு அழுகைக் குரலோடு வலது பக்கம் கால் மரத்து இருக்கும்மா என்றார். ஐயா தொட்டால் தெரியுதா என்று காலைத் தொட்டேன். தெரியுது. ஆனா அசைக்க முடியல” என்றார். பேசிக்கொண்டே கண்ணை அயர்ந்தார். மருத்துவருக்கு அழைத்துக் கேட்டார்கள். ஹீமோ கொடுத்தால் அப்படித்தான் இருக்கும் என்று மருத்துவர் கூறிவிட்டார். 2 மணிக்குப் பார்த்து விட்டு வந்துள்ளேன். அதன்பிறகு அவர் பேசிய வார்த்தை 6 மணிக்கு, மணி என்ன என்று அம்மாவிடம் கேட்டுள்ளார். ஆறு மணிக்கு எங்களையெல்லாம் ஆறாத துயரில் ஆழ்த்திச் சென்று விட்டார். எங்கள் பேராசிரியர். அவர் எங்களையெல்லாம் விட்டு எங்கும் சென்று விடவில்லை. சீரிய சிந்தனையாக, சொல்லாக, எழுத்தாக எப்போதும் எங்களை ஆசிர்வதித்துக் கொண்டே இருப்பார்.
மருத்துவ மனையில் தங்கியதைச் சொல்லிக்கொண்டே இருப்பார்; உங்கள ஐயா மறக்கவே மாட்டாரு; அவர்க்கு என்ன தோனிச்சோ…. உங்கள எப்படியோ கூப்பிட்டுப் பார்த்துட்டுப் போயிட்டார் என்று அம்மா சொல்லிச் சொல்லி அழும்போதுதான்…..…….. தாங்கவே முடியவில்லை.










Monday, May 2, 2016

“திருக்குறள் நெறி தொண்டர்” விருது

மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச்சங்கத்தின் விருது.
நீதியரசர் எம்.எம். சுந்தரேசன் அவர்களிடமிருந்து 
எஸ்.ஆர்.எம். பல்கலையின் துணைவேந்தர் டாக்டர் பொன்னவைக்கோ முன்னிலையில் 
“திருக்குறள் நெறி தொண்டர்” விருது உங்கள் ஆதிராவுக்கு.



Wednesday, April 20, 2016

காதல் என்ன குறுக்கெழுத்துப் போட்டியா


காதல் என்ன 
குறுக்கெழுத்துப் போட்டியா
விடுபட்ட கட்டங்களை
நான்கு ஐந்து ஆறு 
என்று
எழுத்துகளைக் கொண்டு நிரப்பி விட
இடமிருந்து வலம்
வலமிருந்து இடம்
கீழிருந்து மேல்
மேலிருந்து கீழ்
மட்டுமல்ல
கட்டங்களை விட்டு விட்டு
நிரப்பினாலும்
அதில்
உன் பெயரை மட்டும்தான்
எழுத முடியும்
அந்தப் பெயருக்குப்
பொருத்தமில்லாத கட்டங்கள்
காலியாகவே
இருந்து விட்டுப் போகட்டுமே!

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?



கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
*****************************************************************************
தமிழ்த் துறையில் என்னுடன் டாக்டர் சாரதா என்பவர் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அவர் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆனாலும் பல வருடங்கள் பழகியது போல ஒரு நெருக்கம். அத்தனை அன்பானவர். அவர் சில நாட்களாக விடுப்பில் உள்ளார்.

அவர் என்னை அழைத்துப் பேசினார். நலமாக இருக்கிறீர்களா என்று வழக்கமாகப் பேச்சைத் தொடங்கினார். நானும் நலம்தான் என்று கூறினேன். அவர் மீண்டும் மீண்டும் நலமாக உள்ளீர்கள் தானே என்று கேட்டார். நானும் ஆமாம். ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அவர், இரண்டு நாட்களாகக் கனவில் வந்து என்னைத் துன்பப் படுத்துகிறீர்கள் என்றார். எப்படி? என்றேன்.
“நீங்க ஆஸ்பிடல்ல இருக்கீங்க. நானும் என் மகளும் உங்களப் பார்க்க வர்ரோம். நீங்க குழந்தையக் கூட்டிட்டு ஏன் வந்தீங்க?குழந்தையக் கூட்டிக் கொண்டு ஏன் வந்தீங்க? கிளம்புங்கன்னு திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கீங்க. முதல் நாள் என்னமோ உங்கள் நினைவு என்று விட்டு விட்டேன். நேற்றும் திரும்ப அதே கனவு. எனக்கு மனசே சரியில்ல. என்னவோ பயமா இருந்தது” என்றார்.
கனவுகளுக்கும் பிரியங்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் அறிவோம். ஆனால் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்குமான்னு யாராவது சொல்லுங்க.
ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன். கல்லூரியும் செல்லவில்லை. 13 ஆம் தேதி மக்கள் கவிஞர் விருது வழங்கும் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று. அதற்கும் செல்லவும் சொல்லவும் முடியாத நிலையை ஒருவாறாக வீட்டில் இருந்தபடியே சமாளித்தேன் என்பது வேறு. இன்னும் தோள் பட்டை, கை வலியோடும் மருந்துகளோடும் ஓய்வோடும் வீட்டில் இருக்கிறேன்.
அந்தத் தோழி இப்போது ராஜ பாளையத்தில் இருக்கிறார். வியந்தும் பயந்தும் வந்தவுடன் என்னப் பார்க்க வேண்டும் என்று கூறியும் பேச்சை முடித்தார்.
இப்போது என் மற்றும் அவரது வியப்பெல்லாம் கனவு பற்றியது.... (நமக்கு அந்த மூட நம்பிக்கையெல்லாம் இல்லை என்றாலும்) நான் மருத்துவ மனை சென்றதற்கும் அவரது கனவுக்கும் தொடர்பு உண்டா? தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

Thursday, April 7, 2016

மீரா விருது வழங்கும் விழாவில்....

பல நிகழ்வுகளில் கலந்து கொள்கிறோம். ஒரு சில நம் மனத்தை விட்டு நீங்கா நினைவாகி மகிழ்வைத் தருகின்றன. மதுரையில் 03.04.16 ஞாயிறு அன்று வளரி இதழும் சூல் வாசிப்புத் தளமும் இணைந்து நடத்திய கவிப்பேராசான் மீரா விருது வழங்கும் நிகழ்வின் அதிர்வு இன்னும் மனத்தை விட்டு நீங்காமல் பசுமையாக உள்ளது. விழாவைச் சிறப்பாக நடத்திய திரு அருணா சுந்தரராசனின் அன்பும் பழகும் நேர்த்தியும் மனத்தில் அவருக்கு ஒரு அழுத்தமான இடத்தைத் தர வைத்து விட்டது.

நிகழ்வில் கவிஞர் மீராவைப் பற்றி நினைவுப் பேருரையாற்றிய பேரா. தி.சு.நடராசன் அவர்கள் விழியோரம் நீரை வர வைத்தார். தலைமையுரையாற்றிய திரு செல்லா அவர்கள் சுருக்கமான உரையாற்றினார். முத்துநிலவன் ஐயா உடபட வாழ்த்துரை வழங்கிய பலரும் உருக்கமாக உரையாற்றினர்.

விழா தொடங்கும் முன்பும் தொடங்கிய பின்பும் ஒவ்வொருவரும் தனித்தனியாக அறிமுகம் செய்து கொண்டு அளவாளாவியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..

விருதாளர் மு. கீதா, தமிழ்வாசி ( வைரஸ் தாக்குதலில் இருந்து என் முகநூலைக் காக்க வலையில் உதவிய அன்புத் தம்பி), வைகறை, போடி சிவாஜி, அர்ஷியா, சோலைச்சி, இரா. ஜெயா, ராம்போ குமார், ரபீக் ராஜா மற்றும் பல நட்புகளைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக.... (பலரது பெயர்கள் நினைவில் இல்லை. நட்புகள் மன்னிக்கவும்)

அருமையானதொரு நிகழ்வை அமைத்துக் கொடுத்த (விருது வழங்கி சிறப்புரை) அருணா அவர்களுக்கு உள்ளங்கை கொள்ளாத நன்றி மலர்கள்.

எதோ நான்கு புகைப்படங்கள் அனுப்புவார் என்று என் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் புகைப்படக் கருவியில் பதிவான அத்தனை ஒளிப்படங்களையும் அனுப்பி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய சாப்லின் ஸ்டுடியோ கோபாலகிருஷ்ணன் ஆழமான நேசிப்புக்குரியவர்.