Friday, April 30, 2010

நாற்காலி....

http://www.nik.co.uk/wp-content/uploads/2008-stool.jpg



களைப்பாக

வருபவரை

சிற்றுண்டி

தனை ஏந்தி

இளைப்பாறச்

செய்திடுவாய்!



பட்டாடை

தனைவிரித்து

பூந்தொட்டி

வைத்து விட்டால்

மென்மையாய்ப்

புன்னகைப்பாய்!



நாற்காலி

என்றாலும்

ஊர்ச்சுற்றித்

திரியாமல்

ஒழுக்கமாய்

வாழ்ந்திடுவாய்!



முடமாகிப்

போனாலும்

முடிந்தபொருள்

சுமந்தபடி

மூளையில்

நின்றிடுவாய்!



எட்டாத

உயரத்தை

எட்டிவிட

தோள்தந்து

ஜடமாக

நின்றிடுவாய்!



ஏறிமிதிப்பாரை

ஏற்றிவிடும்

தத்துவத்தை

எளிதாக

விளக்கிடுவாய்!





அடுத்த கவலையை...





அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!

அறிவிப்பின்றி
சிதறிப் பாய்ந்த
இதயச்சுனாமியால்
இமைக்கரை உடைந்து
கன்னப்பிரதேசம் தாண்டி
கள்ளப்பிரதேசத்தில்
புகுந்தது
உப்பு வெள்ளம்!

வடிந்த பின்பு
அமைதி அடைந்த
ஆழ்மனக்கடல்
மீண்டும்
அடுக்கத்தொடங்கியது
அடுத்தக் கவலையை!


Sunday, April 4, 2010

இணையத்தில் பொறித்திடுவோம்.....






  http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRD-jwpKmFAmaCPZao69GDLL2eNmGnoP5BwAi8Cx6h7p41UsI_5Cw&t=1
கலைபயின்றேன் என்றாலும் கட்டுரைக்கும் வன்மையிலேன்! 
அலைகளென ஆசைகளைத் தேக்கிவைத்து ஏங்குகிறேன்!  
சரம்சரமாய் நினதுபுகழ் உலகுக்குப் பாய்ச்சிவிட  
கரம்குவித்தேன் உனதுமகள் வரந்தருவாய் எந்தமிழே!
 
நிறையறிவுச் சிந்தையிலேன்; நீடுபுகழ் தமிழமுதைச் 
சிறிதளவு பருகியதன் போதையினால் துடிக்கின்றேன்;  
வரைகடந்து வான்கடந்து என்மொழிதான் உதிக்கின்ற 
பிறைவடிவம் பெற்றதென்று கூத்தாடிக் குலவையிட!

எந்தமிழே! நாவசைத்து நீமொழிந்த முந்துமொழி 
தாய்மொழியே! மற்றந்த பிந்தைமொழி எல்லாம்உன் 
வழிவந்த தங்கைமொழி; தம்பிமொழி; எனஉலகச்
சந்தையிலே போற்றிவிடும் நிலையதுதான் பெறவேண்டும்!



வாழ்முறையை வகுத்தளித்த தொல்ப்பாட்டன் இலக்கணத்தை;         
நூல்முறையாம் எம்தாத்தர் சங்கத்துப் பனுவல்களை;  
என்னினத்து மூதாட்டி ஒளவையவள் ஆக்கங்களை;  
எண்ணில்லா மொழிகண்ட வள்ளுவனின் தமிழ்மறையை;

கம்பநாடன் கனிரசத்தை; தமிழ்ப்புலவன் தனக்கென்றும்
தெம்புதரும் காப்பியமாம் சிலம்பதனை; இடும்! இடும்!
என்றதிரும் போர்ப்பரணி முழக்கத்தை; ஊன்கலந்து
தெவிட்டாது இனிக்கின்ற தேவார; வாசகத்தை;
http://img1.123tagged.com/en/virtualromance/16.gif
வாடும்பயிர் வாட்டமதைப் போக்குகின்ற அருட்பாவை;
ஊடும்சாதி பேதங்களைத் தகர்த்தெறிந்த பாரதியை;
கூடிநின்ற தாசனவன் பகுத்தறிவுச் சிந்தனையை;
பாடிப்பாடி ஆவதென்ன? பழங்கதையா பசிதீர்க்கும்?



கூட்டின் இரைதேடும் குருவியதாய் பறக்கின்றான்!
அறிவுத்தேட் டில்எந்தமி ழன்எங்கோ சென்றுவிட்டான்!
சிறுநோட்டில் இவைஎழுதி நாட்டார் காண்பதுண்டா?
புதுப்பாட்டை இணையத்தில் பொறித்திடுவோம் அவன்பெருமை!

ஏர்பிடித்த ஊர்மகன்தான் எந்தமிழன்! தரணியிலே
நூல்பிடித்த கைகளெல்லாம் ஏங்குகின்ற சீர்பெற்றான்!
ஊர்ப்புறத்துச் செப்பேட்டில் எழுதுவதா அவன்பெருமை?
பார்படிக்க இணையத்தில் பொறிப்பதன்றோ பீடுதரும்!


இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே 
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர் 
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள 
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் இணையத்தில்!





ஆதிரா..