Monday, November 26, 2012
Sunday, November 25, 2012
Wednesday, November 21, 2012
Tuesday, November 13, 2012
Saturday, November 10, 2012
Friday, November 9, 2012
கோடு....
மெல்ல முகம் பார்க்கும்
சின்னக் குழந்தைகளின்
பிஞ்சு விரல்களிடும்
கோலம் எனும்
தண்ணீர்க் கோடு!!
கரையில்லாத அன்பைக்
காணாது கண்டுவிட்டால்
விழியோரம் போட்டுவிடும்
நெஞ்சத்தின்
கண்ணீர்க் கோடு!!
பொங்கிவரும் காதலை
பொய்முகம் காட்டி
மறைத்துவிடும் கன்னிக்கு
நாணமெனும்
பெருமைக் கோடு!!
ஓயாது உழைத்தபின்னும்
ஒட்டிய வயிறுகொண்ட
பாட்டாளி பரம்பரைக்கு
பற்றாக் குறையென்னும்
வறுமைக் கோடு!!
சோர்வில்லா வீரனுக்கு
சொந்தமண்ணாம்
நாடுகாக்கும் சொப்பனமே
வீரமென்னும்
எல்லைக் கோடு!!
பொங்குதமிழ் கவிதைககு
தொடைஎன்ற தளைஎன்ற
எதுகைமோணை இலக்கணமே
முரண்என்னும்
தொல்லைக் கோடு!!
கட்டழகுப் பெட்டகத்தை
கட்டிலிலே முத்தமிட
மொட்டுவிடும்
முகையதுதான்
மழலைஎன்னும்
மஞ்சக் கோடு !!
கட்டிலறை முத்துகளுள்
ஒருமுத்து வரமென்றும்
மறுமுத்து புறமென்றும்
எறிவதுதான்
பேதமென்னும்
வஞ்சக் கோடு!!
Wednesday, November 7, 2012
ஏற்றங்களை மாற்றம் செய்!
உழைப்புச் சாவியால் பூட்டிக் கிடக்கும்
புலன்களை விடுதலை செய்
தேம்பும் குழந்தை மனத்தை
தேக்கு மரத்தால் இழைத்து விடு
உதட்டு முற்றத்தில் மகரந்தப்
பூக்களின் புன்னகை தேக்கு
பருந்தின் கூரிய பார்வையை
கீழ்மையகற்றி மேல்நோக்கி வீசு
விரல் நுனிகளால்
உலக விசையை முடுக்கு
சீமைக் குதிரையின் சீரும் குழம்படியை
குதிகாலில் பூட்டிக்கொள்
இதய இருட்டை
தண்ணொளியால் நிரப்பு
கிழிபடாத ஓசோனாய்
அறிவு வெளிச்சத்தைப் பாய்ச்சு
வெற்றி திராவகத்தைத்
தேகமெங்கும் தெளித்துக் கொள்
எட்டியும் அருகியும் இருக்கும்
ஏற்றங்களை உனதாக மாற்றம் செய்!
Tuesday, November 6, 2012
சிவகாசியின் குட்டி தேவதைகள்
சுவர்க்கத்திற்குச் செல்லும்
வழியறியாது
பையூரில் பயணித்த
குட்டித் தேவதைகள்
வந்திறங்கின
அந்த சிவகாசியில்
சூரியக் குழம்புடன்
வெண்மேகத்துக்குள் ஒளிந்திருந்த
இடிகளை பொடித்து
இட்டும் தொட்டும்
கனவில் பூத்த
வண்ணம் சேர்த்தும்
நமக்கான
விருந்தினைத் தயாரிக்கின்றன
தேவதைகளின்
சின்னஞ்சிறு விரல்கள்
வெடிகளாக
நிலவை
எட்டி உடைத்து
தெறித்து விடுகிறது
அந்தத் திருநாள் கொண்டாட்டம்
வெடித்துச் சிதறிய
வெண்ணிலவின் சில்லுகள்தோறும்
விபத்தில் சிதறிய
அந்தப் மோனாலிசாக்களின்
ஏக்க முகங்கள்!!
Monday, November 5, 2012
Saturday, November 3, 2012
Thursday, November 1, 2012
நாம் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்
ஆய்ந்தாய்ந்து
அறிவுப்போதை தலைக்கேறி
அக்கினி முட்டைகளை
வார்த்தைகளாய்
பொறிக்கின்றன
அறிஞ அசுரங்கள்
இருட்டில் சமைத்த
சட்டங்களால்
வயிற்றுப்
பள்ளத்தாக்குகளில்
நெருப்புகளை
இட்டு நிரப்புகின்றன
அதிகார அசுரங்கள்
மேகத்தால் மூடி மறைத்தாலும்
நீண்டு கொண்டே போகும்
வானமாய்
கைநீட்டும்
கையூட்டு அசுரங்கள்
தன் குட்டிகளை விழுங்கி
தன்னுயிர் வளர்க்கும்
பாம்புக் குவியல்களாய்
பிணம் அவித்து
தனம் குவிக்கும்
இனவெறி அசுரங்கள்
என்று எங்கும்
நர அசுரங்கள்
வளர்ந்து கொண்டிருக்கின்றன
வாமனங்களாக
தீர்க்க ஆயுளுடன்
நாம் தீபாவளி
கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்
நரகாசூரனை அழித்ததாக
நினைத்து
(இந்தக் கவிதை நவம்பர் 2012 தமிழ் நானூறு இதழில் வெளியானது. நன்றி தமிழ் நானூறு)
Subscribe to:
Posts (Atom)