Wednesday, June 19, 2013

அடிக்கரும்பாய் இனித்தவரே!



வீறுகொண்ட எழில்யானை! மொழிப்ப கையை
       வெற்றிகொண்ட தமிழ்ச்சேனை! அகம்பு றத்தைக்
கூறுபோட்டு விளைவித்த மருதம்! எங்கும்
       குனியாதத் தன்மானக் குறிஞ்சி! நாட்டில்
யாருடனும் பகைகொள்ளா நிலவு! யாப்பில்
       எதுகைபோல் இணைந்திட்டப் பண்பாட் டுள்ளம்!
தேரினைப்போல் வலம்வந்தீர் உலகை! ஐயா
       தேடுகின்றோம்! வாடுகின்றோம்! எங்கே சென்றீர்?

வெடித்துவிழும் விதையைப்போல் தமிழை அள்ளி
       வீதியெல்லாம் பயிர்ச்செய்தீர்! உம்மி டத்தில்
படித்துவந்த உள்ளங்களில் தமிழ்உ ணர்வைப்
       பதியமிட்டு, பாத்திகட்டித் தினம்வ ளர்த்தீர்!
அடித்துவரும் புயலாக நடைந டந்து
       அருந்தமிழை நாடெல்லாம் பாய்ச்சி விட்டீர்!
படிப்பதற்கா நூல்யாத்தீர்? படிப்போர் நெஞ்சில்
       படிவதற்கே பைந்தமிழில் நூல்கள் யாத்தீர்!

சீற்றமில்லாத் தென்றலய்யா உமது நெஞ்சம்,
       செந்தமிழ்த்தாய் குடியிருக்கும் தமிழின் கூடல்
மாற்றமில்லாத் திசையைப்போல் கொண்ட கொள்கை
       மாணிக்கச் சுடரொளியின் வெளிச்சக் காடு
ஏற்றமெல்லாம் பெண்ணினத்தார் பெறுவ தற்கே
       எழச்செய்தீர் வள்ளியம்மாள் நிறுவ னத்தை
ஊற்றினைப்போல் எழுகிறதே உம்நி னைவு
       உள்ளூறும் நன்றியினால் வணங்கு கின்றோம்

வெள்ளிவிழா கொண்டாடும் போது உங்கள்
       விசைப்பணியை எண்ணுகின்றோம்! பெண்கள் வாழ்வில்
நள்ளிரவை ஒளிரவைத்த விடியல் நீங்கள்!
       நலத்தமிழால் வெளிச்சமிட்ட பரிதி நீங்கள்
தெள்ளுதமிழ் சிலம்பொலியின் ஏற்றம் போல
       திசையெட்டும் பெண்ணினத்தை ஒளிரச் செய்தீர்
தெள்ளியநீர் ஓட்டம்போல் எங்கள் நெஞ்சம்
       தினம் இருக்கச் செய்தவரே வணங்கு கின்றோம்!

தேதிஓட்டும் நாட்காட்டி! அ.மு.ப. நீரோ
       தண்டமிழ்த்தாய்த் தேரோட்டி! தூய அன்பில்
போதிமரப் புத்தனுக்கே தம்பி நீர்தான்
       புகழ்விரிக்கும் குறள்வழியே நடைந டந்தீர்!
ஆதிமுதல் தமிழ்த்தாய்க்கு அடிக்க ரும்பாய்
       அன்றாடம் இனித்தவரே! கீழ்க்க ணக்கு
நீதிநூலின் மறுபதிப்பே! ஐயா! நாங்கள்
       நினைக்கின்றோம் மீண்டுமிங்கே வருவீ ரோநீர்!



இக்கவிதை வெள்ளி விழா கண்ட வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியின் நிறுவனர் பேரா. முனைவர். அ.மு.பரமசிவானந்தம் அவர்களைப் போற்றி எழுதியது. 2012 - 13 ஆம் கல்வியாண்டின் கல்லூரி மலரில் இடம்பெற்றது. 

     
     


10 comments:

  1. கவிதை மிகவும் நன்று ஆதிரா அவர்களே

    ReplyDelete
    Replies
    1. நன்றி தயாளன் சார்

      Delete
  2. புகழுடன் தோன்றியிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சத்ரியன். பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர். பல பேராசிரியர்களின் உள்ளத்தில் வீற்றிருப்பவர்.

      Delete
  3. அருமை... சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்.

      Delete
  4. அருமையான சொல்லாடல் கவிதை என்றால் இது கவிதை ....!!!!!
    வாழ்த்துக்கள் தோழி .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete