Sunday, March 14, 2010

பெருந்திணை..


அற்றைத் திங்கள்
அன்போடு புணர்ந்த
காதல் திணையில்
காதல் தலைவனே
தலைவியின்
காதலன் ஆவான்

தோழியின் துணையுடன்!!

இற்றைத் திங்கள்

வம்போடு புணரும்
இணையத் திணையில்
கணவனே மனைவியின்
காதலன் ஆகிறான்
கணினித் தோழியால்!!
எழுத்துக்கள் உரசும்
இணையப் பாதையில்
கருகிப் போனது
அன்பின் ஐந்திணை

கலாச்சாரம் கெடுத்து
ஓடிப் படர்ந்தன
பெருந்திணைக் கொடிகள்
மரபை மீறி


கண்கள் பேசும்
காதல் மொழியில்
வாய்மொழி தான்
வாழ்வு இழக்கிறது!!

கணினி வீசும்
காதல் வலையில்
காதலே வாழ்வு
இழக்கிறது!!

காட்சி வேட்கை
ஐயம் தெளிதல்
காதல் விதிகள்
எதுவும் இன்றி
கணினி வளர்க்கும்
காம அக்கினியில்
சாம்பல் ஆகிறது
தமிழன் உருக்கிய
பண்பாட்டு நெய்!!

ஆதிரா..

2 comments:

  1. இக்காலத்தில் பழம் இலக்கியத்தை நினைவுறுத்துவோர் அருகி வருகின்றது. உன் கவிதைகள் அந்த கவலையை போக்குகின்றன்..

    தளர்ந்து நிற்கும் சங்கத்தமிழ் உன்னால் நிமிரட்டும் தோழியே...

    அன்புடன்
    கலை

    ReplyDelete
  2. தங்கள் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி கலை,,,

    ReplyDelete