Sunday, March 14, 2010

வாமனம்....





மேசைமேலிருந்த பூந்தொட்டி
குளியலறையில் இருந்த
நீ வாங்கி வந்த நீலகுவளை
அலமாரியிலிருந்த பலவண்ண ஆடைகள்
அடுக்கி வைத்த புத்தகங்கள்
கம்பிவழி உன் குரலைக் கொண்டுவந்து சேர்க்கும்
தொலைபேசி


கைக்குள்ளிருந்து அடிக்கடி சிணுங்கி
உன் முகத்தைக் காட்டும் அலைபேசி

என்று கண்ணுக்குத் தெரிந்த நினைவுச் சின்னங்கள்
எல்லாவற்றையும் அகற்றி விட்டேன்.

கண்களிலா.
மூளையிலா
இதயத்திலா..
உடல் முழுவதிலா..
உடல் பரவிய குருதியிலா..
குருதியின் அணுத்திரளிலா...
தேடித் தேடிக் களைத்து விட்டேன்...


கண்ணுக்குத் தெரியாத
உன் நினைவுகள்
இருக்குமிடம் அறியாமல்....

அதனைக் கொல்ல எத்தனை முறை
நித்தம் நித்தம் யுத்தம் செய்தேன்
புத்தம் புதிதாய் பொலிவு கொண்டெழுந்தது
வெட்டிய பின்னும் ஒட்டிக் கொண்ட
இராவணன் தலைகளாய்....

மறக்கத் துடித்த ஒவ்வொரு கணமும்
மூன்றாம் அடிக்கு இடம் கேட்டு வைத்த
வாமன பாதமாய் அழுத்தி மிதித்தது
இதயத் தலையை.....

தேனில் மூழ்கிய சிற்றெறும்பாக
பாகில் மூழ்கிய கட்டெறும்பாக
உன் நினைவில் மூழ்கி
நித்தமும் மடிவதென
 சத்தியம் செய்தேன்.

அதற்கும் எனக்குமான
போட்டியில்
உன்னைப்போலவே
வெற்றி கொள்வது
உன் நினைவுகளே...



ஆதிரா..

4 comments:

  1. எந்த வரிகளால் உன்னைப்பாராட்டி வாழ்த்துவதென அறியாமல் விழிக்கிறேன் ஆதிரா...

    மிக அருமை என்று சொல்லி இப்போதைக்கு முடித்தாலும் வார்த்தைகள் என் வசம் வந்தபின் இன்னும் வாழ்த்துவேன் உன் அனுமதியோடு...

    கலை

    ReplyDelete
  2. தொடரும் வாழ்த்துக்கும் வார்த்தை வசப்பட்டுத் தொடரப்போகும் தங்கள் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி கலை...

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்குங்க ஆதிரா

    ReplyDelete
  4. மிக்க நன்றி பத்மா.. தேடி வந்து கருத்து கூறியமைக்கு..

    ReplyDelete